(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் தொடர்ச்சியாக 10 நாட்களுக்குத் தென்படாதவர்களை பி.சி.ஆர். பரிசோதனையின்றி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் மிக மோசமான அனர்த்தம் ஒன்றுக்கான ஆரம்பமாகவே அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்திருக்கிறது.
இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது பத்து நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் எவையும் தென்படாதவர்களை பி.சி.ஆர். பரிசோதனையின்றி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் மிகமோசமான அனர்த்தம் ஒன்றுக்கான ஆரம்பமாகவே அமையும்.
அவ்வாறான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு காரணமாக அமைந்த ஏற்றுக் கொள்ளப்பட விஞ்ஞானபூர்வமான அறிக்கையை மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதேபோன்று தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட்டதும் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அதனைத் தடுப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் ஜனாதிபதி, இராணுவத் தளபதி, தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டோரால் வெளியிடப்படும் கருத்துக்கள் பலவும் ஒன்றுக்கொன்று முரணானவையாகவே இருக்கின்றன.
விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவின் கருத்தின்படி, ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருப்பினும் அவரிடத்தில் அறிகுறிகள் எவையும் தென்படாவிடின் அவர் பி.சி.ஆர். பரிசோதனையின்றி வீடு திரும்ப அனுமதியளிக்கப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் முன்னரை விடவும் தற்போது கொவிட்-19 வைரஸின் கட்டமைப்பில் நிலைமாற்றமொன்று ஏற்பட்டிருப்பதுடன் இதனால் சமூகத்தில் அதிகளவானோருக்கு தொற்று ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோன்று வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் குணமடைந்து வீடு திரும்பினாலும் கூட, மீண்டும் 21 - 28 நாட்களுக்குள்ளாக அவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் தோன்றிய சந்தர்ப்பங்களும் எமது நாட்டிலேயே பதிவாகியிருக்கின்றன.
எனவே தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னதாகவே இதற்கு முறையான தீர்வை காணுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இல்லாவிட்டால் ஊரங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் பரவலினால் மக்கள் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்து மிகவும் பாரதூரமானதாகவே இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment