’இது மிகவும் நல்ல செய்தி’ - அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் டுவிட் - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

’இது மிகவும் நல்ல செய்தி’ - அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் டுவிட்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ‘இது மிகவும் நல்ல செய்தி’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடன் 279 தேர்தல் வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். 

ஜோ பைடன் வெற்றி பெற்ற போதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் தற்போது வரை வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்த பின்னர் ஜோ பைடன் 2021ம் ஆண்டு ஜனவரி 20ம் திகதிதான் ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைய சீனாவில் உருவான கொரோனா வைரஸ் முதன்மை பங்கு வகிக்கிறது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடுப்பூசி விரைவில் தயாராகிவிடும் என வாக்குறுதி கொடுத்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். 

ஆனால், ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரியவரும் வரை கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்கள் வெளிவராமல் இருந்தது.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரியவந்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி இன்று வெளியானது.

அதில், இந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியில் மிகப்பெரிய அளவில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு ஆகும். 

தடுப்பூசி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக ஃபிப்சர் நிறுவனம் அறிவித்த சில நிமிடங்களில் பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, தடுப்பூசி மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது. தடுப்பூசி 90 சதவீதம் பலனளிக்கிறது. இது மிகவும் நல்ல செய்தி’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment