கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளமாட்டேன் என்று பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) தெரிவித்துள்ளார்.
உலகையையே உலுக்கி வரும் கொரோனா வைரசை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக் கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ.
முகக் கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பொல்சொனாரோவுக்கு கடந்த ஜூலை மாதம் 10ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்ட பொல்சொனாரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துவந்தார். அவருக்கு, 3 முறை கொரோனா பரிசோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது.
தொடர்ந்து ஜூலை 25ம் திகதி நடத்தப்பட்ட 4வது கொரோனா பரிசோதனையில் பொல்சொனாரோவுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்ததையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்தார்.
இதற்கிடையில், கொரோனா வைரசை தடுக்கும் வகையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் கொரோனா வைரசை தடுப்பதில் நல்ல பலன் அளிக்கிறது.
தடுப்பூசி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட உடன் அதை உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அந்த தடுப்பூசியை தான் போட்டுக்கொள்ளப் போவதில்லை என கூறி ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சமூகவலைத்தளம் வாயிலாக நடைபெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ, ‘நான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப் போவதில்லை. அது என் உரிமை’ என கூறினார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் நாடு 3வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் 62 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment