வவுனியாவில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை அகற்றுமாறு பொலிஸார் முற்றுகை - நீதிமன்றத் தடை இதற்கு செல்லாது என தெரிவித்ததால் திரும்பினர் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

வவுனியாவில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை அகற்றுமாறு பொலிஸார் முற்றுகை - நீதிமன்றத் தடை இதற்கு செல்லாது என தெரிவித்ததால் திரும்பினர்

மாவீரர் வாரத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்கவிட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவற்றினை அகற்றுமாறு வவுனியா பொலிஸார் அவ்விடத்தினை முற்றுகையிட்டனர்.

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் மற்றும் நடை பயணமின்றி சிவப்பு, மஞ்சள் கொடிகளை தனது வீட்டுடன் கூடிய கடை வாசலில் பறக்கவிட்டு தனது உறவுகளுக்கான நினைவேந்தல் வாரத்தை வவுனியா, தோணிக்கல் பகுதியில் செ. அரவிந்தன் என்பவர் ஆரம்பித்துள்ளார்.

தனது வீட்டு வாசலின் முன்பகுதியில் கம்பங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்க விட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் இறந்த தனது உறவுகளை தான் நினைவு கூரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (21) இரவு 7.30 மணியளவில் அவ்விடத்திற்கு சென்ற வவுனியா குற்றத் தடுப்பு பொலிஸார் அக்கொடிகளை அகற்றுமாறு தெரிவித்ததுடன் நீதிமன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்து கொடிகளை நாட்டிய நபருடன் பொலிஸார் தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

இதன்போது தான் நீதிமன்ற கட்டளைக்கு ஏற்பவே செயற்பட்டுள்ளேன். சிவப்பு, மஞ்சள் கொடி பறக்க விடைத் தடையில்லை என குறித்த இளைஞன் முரண்பட்டார்.

இதனையடுத்து, மேலதிகாரியின் உத்தரவிற்காக அவ்விடத்திலிருந்து பொலிசார் அகன்று சென்றுள்ளனர். மேலும், இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு வருகை தந்து கொடிகளை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து சென்றனர்.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மற்றும் இலங்கை தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள், மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் சட்டத்திற்கு அமைவாக, மன்னார், வவுனியா பிரதேசங்களில், கூட்டமாக மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டிக்க,  நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை (19) தடையுத்தரவு விதித்ததோடு, மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிக்க அனுமதி வழங்குமாறு தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு, அது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்றும் மன்றுக்கு இது தொடர்பில் அதிகாரமில்லை எனத் தெரிவித்து, அம்மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

No comments:

Post a Comment