திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவ நகர் பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளான்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (27) இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வனர்த்தத்தில் திருகோணமலை, புளியங்குளம், தேவ நகர் பகுதியைச் சேர்ந்த தனேந்திரன் அர்ஜுன் (10) எனும் சிறுவனே இச்சம்பவத்தில் படுகாயமடைந்ததாக, வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் உயரமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதில் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக இடிந்து வீழ்ந்த நிலையில் சிறுவன் சிக்குண்டதாவும், அயலவர்களின் உதவியுடன் அரை மணி நேரத்துக்குள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சிறுவனின் தந்தை தனேந்திரன் தெரிவித்தார்.
ஆனாலும் சிறுவனின் இரண்டு கைகள் உடைந்த நிலையில் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் தற்போது வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
(ரொட்டவெவ குறூப் நிருபர்)
No comments:
Post a Comment