20க்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் பிரத்தியேக ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சி வரிசையில் ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ள போதுமான இடம் இல்லாமையே இதற்கு காரணமாகும் என கூறப்படுகிறது.
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20ஆம் திருத்த சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இதனையடுத்து ஒன்று கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு, அவர்களை ஆளும் கட்சி தரப்பினராக கருத தீர்மானித்திருந்தது. இதன்படி பாராளுமன்றத்தில் அவர்ளுக்கான ஆசனங்களை ஆளும் கட்சி வரிசையில் ஒதுக்குமாறு அந்த கட்சி சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரியிருந்தது.
எவ்வாறாயினும் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் உள்ளதுடன் அதில் 30 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கட்டளை சட்டத்தின்படி பாராளுமன்றில் ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான முழுமையான அதிகாரம் சபாநாயகரிடமே உள்ளது.
சபாநாயகரால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் பாராளுமன்ற பொதுச் செயலாளரினால் படைக்கள சேவிதருக்கு அறிவிக்கப்படும். இதனையடுத்தே ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.
குறித்த 8 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் தொடர்பில் பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்ர பெர்னாண்டோவிடம் கேட்ட போது, எதிக்கட்சி வரிசையில் சிரேஷ்டத்துவ அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment