ஜனாஸா எரிப்பில் முஸ்லிம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எங்களது உரிமைகளைக் கருத்திற்கொண்டு நல்லதொரு முடிவை ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும் - முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி - News View

About Us

About Us

Breaking

Sunday, November 15, 2020

ஜனாஸா எரிப்பில் முஸ்லிம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எங்களது உரிமைகளைக் கருத்திற்கொண்டு நல்லதொரு முடிவை ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும் - முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி

(எஸ்.அஷ்ரப்கான்)
முஸ்லிம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எங்களது உரிமைகளைக் கருத்திற்கொண்டு நல்லதொரு முடிவை அதிமேதகு ஜனாதிபதியவர்களும் மாண்புமிகு பிரதமர் அவர்களும் எடுக்க வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ.ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.

ஜனாஸா எரிப்பு தொடர்பாக அவர் இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கோவிட் – 19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் தகனம் செய்யப்பட்டு வருவதானது, இஸ்லாமிய மதக்கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணான ஒரு செயல் என தங்களது மதத்தில் உறுதியாக வலியுறுத்தப்படுவதால், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கடந்த ஒரு வருட காலமாக வினயமாக அவர்கள் அரசாங்கத்தை வேண்டி வருகின்றனர்.

இலங்கையில் கோவிட் தொற்றிற்கு பலியாகிய சகலரது சடலங்களும் தகனம் செய்யப்பட வேண்டுமென்ற வர்த்தமானி அறிக்கையொன்று கடந்த 31ம் திகதி மார்ச் மாதம் சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டதனையடுத்து, அந்த அறிக்கையினை வாபஸ் பெற்று அதில் அடக்கம் செய்வதற்கும் அனுமதி வழங்க வேண்டுமென திருத்தம் செய்யப்பட வேண்டுமென 30 முஸ்லிம் அமைப்புக்கள் வேண்டுதல் விடுத்திருந்தனர்.

உலக சுகாதார அமைப்பினால் சர்வதேச நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் சடலங்களை சில கட்டாய சுகாதார நடைமுறைகளைப்பேணி தகனம் செய்யவோ அல்லது ஆழமான குழிகளில் அடக்கம் செய்யவோ முடியுமென அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து உலகில் சகல நாடுகளிலும் இந்த ஆலோசனை பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், இலங்கையில் மட்டும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்கள் துச்சமென மதிக்கப்பட்டு, ஒரு இன, மதவாதப் போக்குடன் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டு வருவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதென முஸ்லிம்கள் அபயக்குரல் எழுப்பி வருகின்றனர்.

அரசியல் ரீதியாகவோ அல்லது பெரும்பாண்மை, சிறுபாண்மை என்ற வர்க்க பேத ரீதியாகவோ மத விவகாரங்களில் தீர்மானங்கள் எடுப்பதற்கு ஒரு போதும் இடங்கொடுக்க முடியாது. இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் தத்தமது நம்பிக்கையின் அடிப்படையில் மத விடயங்களைக் கடைப்பிடிப்பதற்கான பூரண சுதந்திரமும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே முஸ்லிம்கள் ஜனாஸா அடக்க விடயத்திலும் தங்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஆட்சேபனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருந்த போதிலும், முஸ்லிம் சமூகத்தின் ஆதங்கத்தையும் உள்ளாந்த உணர்வுகளையும் அரசாங்கமும் அதன் சுகாதாரப்பிரிவின் அதிகாரிகளும் கிஞ்சித்தும் கவனத்திற்கொள்வதாக இல்லை. தகனம் செய்வதற்கான காரணங்களை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கவும் அவர்களால் முடியவில்லை. உலகின் தலைசிறந்த வைத்திய நிபுணர்கள் இலங்கையில் தான் இருக்கின்றார்கள். தேவையென்றால், இலங்கையைத்தான் உலக சுகாதார மையம் பின்பற்ற வேண்டுமென்ற ஒரு வகையான இறுமாப்புடன் அவர்கள் நடந்து கொள்கின்றனர்.

உலக சுகாதார மையம் இலங்கைக்கு மாற்றப்பட வேண்டுமென்று ஒரு கட்டளையை இவர்கள் இட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஊடகங்கள் மூலமாக இரண்டு காரணங்களை தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்காக வெளியிட்டுள்ளார்கள். அதில் முதலாவதானது இலங்கையின் பூகோள அமைவின்படி நிலத்தைத் தோண்டும் போது நீர் மட்டம் தெரிவதாகவும், அந்த நீரின் மூலம் கொரோனா கிருமிகள் நிலத்தின் அடியில் பரவி இங்குள்ள ஏனையவர்களிலும் தொற்றிக் கொள்ளும் என்பதாகும். 

இரண்டாவது காரணமானது, மிகவும் பயங்கரமானதாகும். கொரோனா பாதிப்புக்குள்ளான சடலத்தை முஸ்லிம்களிடம் கையளித்தால் அதனை அவர்கள் ஒரு உயிரியல் ஆயுதமாக (Biological Weapon) பாவித்து கொரோனா வைரஸை ஏனைய சமூகங்கள் மீது தெளித்து அனர்த்தத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதாகும். ஆக, இந்த இரண்டு காரணங்களும் தான் இப்போதைக்கு வெளிப்பட்டுள்ளன.

சென்ற வருடம் அம்பாறையிலுள்ள ஒரு பெட்டிக்கடை ஓட்டலில் கொத்துறொட்டி சாப்பிடச்சென்ற ஒருவர் தனது பீங்கானுக்குள் ஒரு சிறிய கோதுமைக்கட்டி வெள்ளையாகக் கிடந்ததென்றும், அது வேண்டுமென்றே முஸ்லிம் கடைக்காரரால் கருத்தடை செய்யும் நோக்கத்துக்காக தனக்குத் தரப்பட்டதாகவும் அவரால் எழுப்பப்பட்ட பிரச்சினை 3 வாரங்களாக முஸ்லிம்களுக்கெதிரான கலவரமாக உருவெடுத்த வரலாறு நாம் அனுபவித்த தொன்றாகும்.

இவ்வாறான சம்பவத்தை நம்பியவர்கள் முஸ்லிம்கள் கொரோனா கிருமிகளையும் ஆயுதமாகப் பாவித்து விடுவார்கள் என ஏற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கையாக உயிரியல் ஆயுத (Biological Weapon) விடயத்தைக் கருத்தில் கொண்டார்களோ தெரியாது.

இதற்கிடையில் இன்றைய பத்திரிகையொன்றில் முகற்பக்கச் செய்தியாக ஒரு பௌத்த துறவி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

‘முஸ்லிம்களின் உடல் தகனம் விடயத்தில் மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம், பௌத்தர்கள் உரிமைகளைக் கோரினால் பாரிய நெருக்கடி ஏற்படும்’ என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான கருத்துக்கள் இக்காலகட்டத்தில் வெளிவரும் போது, இன்னும் ஒரு இனக்கலவரம் கருக்கொள்ளுகின்றதோ என்றவொரு அச்சம் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இவ்வாறெல்லாம் கருத்துக்கள் வெளிவருவதற்கான சூழலை இன்னும் நீடிக்க விடாமல் முஸ்லிம்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கான பதிலை தாமதிக்காமல் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சார்பிலும் பல்வேறு அமைப்புக்கள் ஏற்கனவே அரசாங்கத்திடம் வினயமாக விடுத்துள்ள வேண்டுகோள்கள் பற்றியும் ஞாபகமூட்டடிக்கொள்ள விரும்புகின்றோம்.

நீதிமன்றத்திலும் இந்த விடயம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மதம் சார்ந்த உலகளாவிய சமூகத்தின் கோரிக்கைக்கான தீர்வு தாமதமாகும் ஒவ்வொரு தினமும் முஸ்லிம்கள் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்த வேண்டுகோளுக்கான தீர்வை உடனடியாக முதன்மைப்படுத்தி வெளியிட வேண்டும்.

கொரோனா வைரஸ் கிருமியானது, பூகோளத்தின் ஒரு அங்கமாகவுள்ள இலங்கையில் மட்டும் தனது தன்மைகளை மாற்றிக்கொண்டு பூமிக்கு அடியிலும் நிலத்திலும் பரவி வருவதாக ஒரு விளக்கம் சொல்லப்பட்டு வருகின்றது. இதனை விஞ்ஞான ரீதியாக நிரூபித்து உலக சுகாதார மையத்துக்கு அறிவிக்க வேண்டிய ஒரு கடப்பாடு இங்குள்ள நிபுணத்துவ செயலணிக்கு இருக்கின்றதென்பதை மறந்து விடக்கூடாது.

உலக சுகாதார மையத்தை அங்கீகரித்து அதன் கட்டளைகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நாடு என்ற வகையில், இலங்கையிலுள்ள விசேட செயலணி தனது அரிய கண்டுபிடிப்புக்களை உலக சுகாதார மையத்தினூடாக உலகமெங்கும் அமுல்படுத்தி கொரோனா அனர்த்தத்தை குறுகிய காலவரைக்குள் கட்டுப்படுத்துவதற்கு உதவ முடியும்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் மட்டும் இந்த அரிய கண்டுபிடிப்பை பரிசோதனை செய்து கொண்டிருப்பதற்கு நாம் ஒன்றும் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளல்ல.

நமது நாட்டிலுள்ள பெரும்பாண்மையினரைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களும், மதத்தலைவர்களும், புத்திஜீவிகளும் பல தன்னார்வ அமைப்புக்களும் முஸ்லிம்களின் சடலங்களைத் தகனம் செய்வதற்கெதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

கோவிட் தொற்று விடயமாகக் இறுதியாகக் கூட்டப்பட்ட வைத்திய நிபுணர் குழுக்கூட்டத்தில் சிலர் அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இருப்பதாகவும், ஒரு சிலரே இறுக்கமாக பிடிவாதமாக எதிர்ப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. முடிவெடுக்கும் கூட்டத்தில் கூட ஒத்த கருத்தில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

அவ்வாறானதொரு சந்தரப்பத்தில் அதாவது தகனஞ்செய்வதை ஏகமானதாக ஏற்றுக்கொள்ள முடியாதவொரு நிலைமை தோன்றுமிடத்தில் சர்வதேச தீர்மானங்களோடு ஒத்துப் போவது தான் ஒரு யதார்த்தமான தீர்வாக அமைய வேண்டும். நிறைவேற்றதிகாரம் இந்த இடத்தில் தலையிட வேண்டிய ஒரு கடப்பாடுள்ளது.

ஜனாஸா எரிப்புப் பிரச்சினையானது, இன்றுவரை ஒரு முக்கியத்துவமற்ற உள்நாட்டுப் பிரச்சினையாகவே நீண்டு கொண்டு போகின்றது. தீர்மானிக்க வேண்டியவர்கள் எல்லோரும் நிபுணர் குழுவினர் உட்பட இங்கு தான் இருக்கின்றார்கள்.

முடிவுகளை அறிவிப்பவர்களும் நாட்டுக்குள் தான் உள்ளார்கள். ஆனாலும், மேற்குறித்த நிபுணர் குழுவானது, இந்த உலகில் வேறு எங்கோ ஒரு நாட்டிலிருந்து கொண்டு செயற்படுவது போலவும், அதனை நெறிப்படுத்துவதற்கும் அதற்கு ஆலோசனை வழங்குவதற்கும் இங்கு யாருக்கும் அதிகாரம் அல்லது சட்டபூர்வமான உரிமையில்லை என்பது போலும், ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விட்டு எல்லோரும் அவரவர் பாட்டுக்கு ஓய்வெடுப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. முஸ்லிம்களின் வேதனையைப் பொருட்படுத்தாது வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகவே தெரிகின்றது.

இதுவொரு தூரதிஷ்டமான நிலைமையாகும். ஜனாஸாக்களை அடக்கம் செய்வதைத் தடுப்பது அரசாங்கமல்ல என அரசங்கத்திலுள்ள ஒரு சிலர் அறிக்கைகளை விட்டு அரசைக்காப்பற்றுவதில் கரிசனை காட்டுகின்றார்கள். ஆனால், இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கான கடப்பாடு அரசாங்கத்துக்கு மட்டும் தான் உள்ளதென்ற மறுக்க முடியாத உண்மையையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

குறிப்பாக 20வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதற்குப் பின்னர் யாரும் எந்த நொண்டிச்சாட்டையும் கூற முடியாது.

அரசாங்கத்தின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் தங்களால் இயன்றவரை இவ்விடயத்தில் தங்களது சமூகத்துக்காகப் போராடிக்கொண்டிருப்பதை நாம் நன்றியுடன் நோக்குகின்றோம். அவர்களை நாம் குறைகூறவில்லை. அவர்களும் ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் நன்றாக அறியும்.

அதே வேளையில், அரசுக்கு ஆதரவாக எதிர்த்தரப்பிலிருந்து தாவி 20வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் வாக்களிப்பதற்கு முன்வைத்த நிபந்தனைகள் பலவற்றில் இந்த ஜனாஸா எரிப்பு விடயம் தான் பிரதானமானதாகும் என்ற ஒரு புரளியைக் கட்டவிழ்த்து விட்டு தங்களது வரலாற்றுத் தவறுகளுக்கு நியாயம் தேடப்பார்க்கின்றனர்.
உண்மையில், இவ்வாறாக கூறுவதானது அரசாங்கத்தை இழிவுபடுத்தும் ஒரு நிலைக்கே இட்டுச்செல்லும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத சிறுபிள்ளைத்தனமாகும்.

முஸ்லிம் வாக்குகளைப் பாராளுமன்றத்தில் பெற்றுக் கொள்வதற்காகத்தான் ஜனாஸா எரிப்பு நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றியுள்ளதாகவும், எனவே, முஸ்லிம்களின் கைகளை முறுக்கி பலவந்தமாக வாக்களிக்க வைத்ததாகவும் இது பொருள்படும். சர்வதேச மட்டத்திலும், இஸ்லாமிய நட்பு நாடுகள் மத்தியிலும் அரசாங்கத்துக்கு ஆதரவாக ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பிரசாரத்தில் ஈடுபட்ட முஸ்லிம் கட்சிகள் மட்டத்திலும் அரசாங்கத்தின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய விடயமாக இது சித்தரிக்கப்படும்.

முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களில் கட்டாயமாக்கப்பட்ட ஜனாஸா அடக்கம் விடயத்தை ஒரு ஆயுதமாகப் பாவித்து அவர்களின் உணர்வுகளைச் சாகடித்து மூர்க்கத்தனமாக அரசாங்கம் எம்.பீக்களை வஞ்சித்து விட்டதாகப் பொருள்படக்கூடும். இது பற்றிய உண்மைத் தன்மையை தெளிவுபடுத்த வேண்டிய தேவையொன்று அரசாங்கத்துக்குள்ளதாக நாம் அபிப்பிராயப்படுகின்றோம்.

இது ஒரு புறமிருக்க இந்த ஜனாஸா விடயத்தில் ஒரு வெற்றிக்கிண்ணப்போட்டி முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கிடையில் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் அசிங்கமான நாகரிகமற்ற விதத்தில் பதிவுகள் இடப்படுகின்றன. ஜனாஸா எரிப்பைத் தடுப்பதில் முதலாவது வெற்றி பெறற்வர் யார் என்ற போட்டியில் அரசியல் தலைவர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

வெற்றிக்கம்பத்தைத் தொடப்போகின்றார். இதோ தொட்டும் விட்டாரென்று அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் முந்திக் கொள்ள வேண்டுமென்று சிலர் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் கிரிக்கட் போட்டியில் சிக்சர் அடிப்பவர்களுக்கும், ஜனாஸா எரிப்பைத்தடை செய்வதில் முந்திக் கொள்பவர்களுக்கும் இடையில் ஒரு போட்டி நடைபெறுவதாகவே தெரிகின்றது.

முஸ்லிம் ஊடகங்களும், வலைத்தளங்களும் இந்த உணர்வுபூர்வமான விடயத்தைக் கேலிக்கூத்தாக்கிக் கொள்ளக்கூடாது. ஜனாஸா தகனம் செய்யப்படுவதையிட்டு இந்த உலகிலுள்ள அத்தனை முஸ்லிம்களும் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அது போல, முஸ்லிம்களுக்கு ஆதரவாக பிறமத அறிஞர்களும், மதகுருமாரும், நடுநிலை அரசியல் தலைவர்கள் சிலரும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் எவர் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்றவாறு இந்தப் புனிதப் போராட்டத்தைக் கேலிக்கூத்தாக்குவதை விட்டு விட்டு ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் எண்ணங்களின் ஈடேற்றங்களுக்காக இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.

இது விடயமாக பல பயனுள்ள கருத்துக்களை ஊடகங்கள் மூலமாக எழுத்துருவிலும், குரல் பதிவாகவும் தெரிவித்து வரும் நல்லுள்ளங்களையும் பாராட்டாமலிருக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment