ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தாமதமடைந்தாலும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் - 20ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு அதனை மேற்கொள்ள முடியுமாகி இருக்கும் : அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தாமதமடைந்தாலும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் - 20ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு அதனை மேற்கொள்ள முடியுமாகி இருக்கும் : அமைச்சர் அலி சப்ரி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஜனாதிபதி ஒருபோதும் தலையிட்டதும் இல்லை. தலையிடவும் மாட்டர் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

மேலும், நாட்டில் இருக்கும் பிரதான நீதிமன்றங்களான உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பற்றுக்கு கடந்த 42 வருடமாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. 20ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு அதனை மேற்கொள்ள முடியுமாகி இருக்கின்றது. 

உயர் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளின் எண்ணிகையை 11 இல் இருந்து 17 வரையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையை 12 இல் இருந்து 20 வரையும் அதிகரிக்க இருக்கின்றோம்.

உயர் நீதிமன்றத்துக்கான 6 நீதிபதிகளின் பெயர்கள் தற்போது ஜனாதிபதியால் பெயரிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவர்கள் அனைவரும் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாவர். 

இந்த விடயத்தில் ஜனாதிபதி மிகவும் நேர்மையாகவே செயற்படுகின்றார். அத்துடன் உயர் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் வழக்குகளும் மேன்முறையீட்டு நீதிமன்றில் 4 ஆயிரத்து 500 வழக்குகளும் விசாரிக்காமல் குவிந்திருக்கின்றன.

மேலும் கடந்த அரசாங்க காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழங்குகளில் இருந்து தற்போது அவர்கள் விடுதலையாகுவதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறு விடுதலையாகுவதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் காரணங்கள் எதுவும் இல்லாமலும் அரசியல் அடிப்படையிலும் அன்று வழக்குகள் தொடுக்கப்பட்டதால் தற்போது விடுதலையாகின்றனர். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதியின் 35 க்கும் அதிக வழங்குகளில் நான் தனிப்பட்ட ரீதியில் ஆஜராகி இருந்திருப்பதால் இந்த விடயங்கள் எனக்கு தெரியும்.

மேலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தி இருக்கின்றார். ஏப்ரல் தாக்குதல் போன்றதொன்று இடம்பெறாமல் இருக்கும் வகையில், அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக செயற்படுவதால் விசாரணைகளில் தாமதம் ஏற்படலாம். ஏனெனில் குற்றவாளிகள் குறுக்குவழிகளால் தப்பித்துக் கொள்ளவும் கூடாது. 

அதேபோன்று தாக்குதலுடன் சம்பந்தப்படாத அப்பாவிகள் தண்டனைக்கு ஆளாகவும் கூடாது என்பது முக்கியமாகும். இருந்தபோதும் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் எனவே நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்கவும் அரப்பணிப்புடன் செயற்படுவோம் என்ற உறுதியை வழங்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment