(எம்.மனோசித்ரா)
2018 ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சின் பின்னர் காணப்பட்ட 52 நாள் அரசாங்கத்தின் மீது சர்வதேசத்தின் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் சற்று அதிகரித்திருந்த போதிலும் 2013 இல் 3.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
அதன் பின்னர் தற்போது வரை பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்த மட்டத்தில் தளம்பல் நிலையிலேயே உள்ளது. இந்த நிலைமையை மாற்றி பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கு நீண்ட கால வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
2018 ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சி மற்றும் அதன் பின்னர் காணப்பட்ட 52 நாள் அரசாங்கம் என்பவற்றின் காரணமாக சர்வதேசத்தில் இலங்கை மீது காணப்பட்ட நம்பிக்கை சரிந்து ரூபாவின் மதிப்பும் குறைவடைந்தது.
2015 - 2019 ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் கடன் 5600 பில்லின் ரூபாவாகும். கடன் அதிகரித்தாலும் அதற்கு ஈடான அபிவிருத்தி திட்டங்கள் எம்மால் முன்னெடுக்கப்பட்டன.
வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் கூறினார்.
மக்களின் ஊழியர் சேமலாப நிதிக்கான வரியே குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதனால் எதிர்கால முதியவர்ளே பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு சில்லறை விலை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் பொதியிடப்படாத சீனா ஒரு கிலோ 140 ரூபாவுக்கும் அரிசி ஒரு கிலோ 110 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களில் மாத்திரம் 120 பில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment