நீர் வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கில் நண்டு வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் பிரதேச நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைகள் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டன.
தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் பயனடைந்த இறுதிக்கட்ட பயனாளர்களுக்கான காசோலைகளை அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா அண்மையில் வழங்கி வைத்தார்.
உலகளாவிய புரதத் தேவையில் கணிசமானளவை நீர் வேளாண்மை ஊடாகவே பெற்றுக் கொள்ள முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் துறைசார் அமைப்புக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு உலக நாடுகள் நீர் வேளாண்மையில் ஆர்வம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கையிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மன்னார் பிரதேசத்தில் நண்டு வளர்ப்பை விருத்தி செய்யும் நோக்கில் சுமார் 26 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு மாணிய அடிப்படையில் தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் நக்டா நிறுவனத்தில் வழங்கப்பட்ட நியமங்களுக்கு அமைய கட்டம் கட்டமாக குறித்த நிதி வழங்கப்பட்ட நிலையில், இறுதிக் கட்டமாக தேவன்பிட்டி மற்றும் இலுப்பைக்கடவை போன்ற பிரதேசங்களை சேர்ந்த 7 பயனாளர்களுக்கான தலா இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுதியான காசோலைகளையே அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
மேலும், தற்போதைய சர்வதேச பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தன்னிறைவுப் பொருளாதாரத்தில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை விருத்தியில் அதிக கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களுக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment