தனியார்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சம்பளத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

தனியார்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை சம்பளத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம்

கொவிட்-19 வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக்கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு Zoom தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (27) நடைபெற்றது.

இதன்போது அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இது தொடர்பாக தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கொவிட்-19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதனை தொடர்ந்து தனியார்துறை ஊழியர்கள் சம்பளம் குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக ஏற்கனவே இதற்காக அமைக்கப்பட்ட செயலணியிளால் நடைமுறைப்படுத்தப்பட்ட இவர்களுக்கான சம்பள நடைமுறையை இவ்வருடம் செப்டம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கையை அரசாங்கம் தனியார்துறையினருக்கு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானம் வருமாறு.

கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக தொழில் வழங்குனர்கள், தொழிற் சங்கங்கள், தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியால் 2020 மே மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் கீழ்காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடன்பட்டு அதற்கமைய மேற்கொள்ளப்பட்டது.

• கொவிட்-19 தொற்றால் வேலை நிறுத்தப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர்களை தொழிலிலிருந்து நீக்காமல் இருத்தல்.

• சமூக இடைவெளியைப் பேண வேண்டியிருப்பதால், நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களையும் பணியில் அமர்த்துவதற்கு இயலாது போவதால் ஊழியர்களை நேரசூசி அடிப்படையில் அல்லது வேறு பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி சமமாக பணிபுரியும் வகையில் பணியில் அமர்த்துதல்.

• வேலை இல்லாததால் ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிடுவதால், நிறுவன ஊழியர்களுக்கு இறுதியாக செலுத்தப்பட்ட மாதாந்த மொத்தச் சம்பளத்தின் அடிப்படைச் சம்பளத்தின் 50 வீதம் அல்லது ரூபா 14,500 இரண்டிலும் மிகவும் நன்மையான தொகையை செலுத்தல்.

• அவ்வாறு செலுத்தும் சம்பளத்திற்காக தொழில் வழங்குனரால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான செலுத்தல்களை மேற்கொள்ளல்.

தற்போது கொவிட்-19 தொற்று நாட்டில் பரவி வரும் நிலைமையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை மேற்குறிப்பிட்டவாறு செயற்படவும் குறித்த செயலணி உடன்பாடு தெரிவித்துள்ளதாக தொழில் அமைச்சர் அவர்கள் முன்வைத்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment