ரிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு - தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

ரிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு - தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

இதன்போது அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 ​​இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் அவர் மீது இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதன், கடந்த 19ஆம் திகதி தெஹிவளை, எபினேசர் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடி வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவருடன், அவருக்கு அபயமளித்து கைதாவதை தடுக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட 7 பேரை சிஐடியினர் கைது செய்திருந்தனர்.

இதேவேளை, தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனுவை, எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதி எடுத்துக் கொள்ள, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment