ருத்ரா
வாகனேரிக் குளத்தில் நீர் இருக்கும் போது, அதனை வினியோகிக்க வேண்டியது நீர்ப்பாசனத் திணைக்களத்தினுடைய கடமையாகும். அதனை ஏன் வினியோகிக்கவில்லை என்பது பற்றி நாம் அறிய வேண்டும். இத்திட்டத்தில் 15,000 ஆயிரம் ஏக்கருக்கு நீர்ப்பாசனம் வழங்குவதென்று வெளிவந்த செய்தியானது தவறானதாகும் என வாகனேரி நீர்ப்பாசனத் திட்ட விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நடவடிக்கையினால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை ஓட்டமாவடியிலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டக் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
வாகனேரி நீர்ப்பாசனத்திட்ட முகாமைத்துவக் குழுத்தலைவர் சி.புஸ்பாகரன் தலைமையில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
2020ம், 2021ம் ஆண்டிற்கான பெரும்போகச் செய்கைக்காக தீர்மானிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பானது, 9,587 ஏக்கராகும். நீர்ப்பாசனத்தின் மூலம் 7,494 ஏக்கரும், மானாவரி மூலமாக 2,093 ஏக்கரும், உப உணவுப்பயிர்ச் செய்கைக்காக 239 ஏக்கரிலும் பயிர்ச்செய்கைப் பண்ணப்படத் தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்தின்படி மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையிலான ஆரம்பக்கூட்டத் தீர்மானத்தின்படி ஒக்டோபர் மாதம் 10ம் திகதி நீர் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, வாகனேரித்திட்டத்தின் கீழுள்ள பண்டாரக்கட்டு மற்றும் தவனைக்கட்டு ஆகிய இரு பெரிய அணைக்கட்டுக்களின் திருத்த வேலைகள் உலக வங்கியின் நிதியினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிதியானது, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முடிவில் முடிவுறுத்தப்படவுள்ளது. அதற்கு முன்பு குறித்த வேலைத்திட்டத்தினை சரிவர முடிக்க வேண்டியுள்ளமை நீர்ப்பாசனத் திணைக்களத்தினுடைய கடமையாகும்.
எனவே, இத்திட்டம் முடிவு பெற்றால் அதன் மூலம் குறித்த 7,494 ஏக்கர் விவசாயத்திற்கும் சிறுபோகத்தில் சரியாக நீர் வழங்க முடியும். அதற்கான வேலை முடிவுற மேலும் 10 நாட்கள் கால தேவையேற்பட்டது.
இதனால் நீர் வினியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டது. 10 நாட்கள் மேலும் தேவை என்பதை விவசாய கண்டத்திற்குரிய தலைவர்களுடைய அனுமதி பெற்ற பின்னரே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு நீர் வினியோகம் வழங்கப்பட்டது. தற்போது குறித்த கண்டங்களுக்குரிய நீர் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 10ம் திகதி வழங்கப்பட வேண்டி நீர் 20ம் திகதி வழங்கப்பட்டாலும், குறித்த வேளை வயல்களுக்கு நீர் சென்று சேரவில்லை. இதற்கான காரணம் நீர் வழிந்தோடும் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மண்ணகழ்வாகும்.
எனவே, நீர்ப்பாசனத் திணைக்களம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் வரட்சி போன்ற விடயங்களைக் கவனத்திற் கொண்டு பாராமுகமில்லாமல் நீரினைச் சேமித்து வைத்திருந்தமையினால் இம்முறை விவசாயிகள் தமது நீர்த்தட்டுப்பாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்னர்.
எனவே, விவசாயிகள் தங்களது இவ்வாறான விடயங்களை விவசாயத்திட்டமிடல் பிரிவுடன் தொடர்பு கொண்டு செயற்படுவது நல்லதாகும். விவசாயிகளும் அதிகாரிகளுக்குமிடையில் முரண்பாட்டு நிலையினைத் தோற்றுவிக்கும் முறையில் ஊடகங்களில் செய்தி வெளியிடுவது ஒரு கவலை தரும் விடயம் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறதொரு சம்பவங்கள் இடம்பெறாமல் வழியமைக்க வேண்டுமென இதன் போது கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தின் வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்படும் விவசாயத்திற்கான நீர் வழங்கல் வினியோத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் விவசாயிகள் தமது விவசாய நிலங்களுக்கு நீரின்றி பெரும்போக விவசாயச் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment