லிந்துல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை, டயகம பிரதான வீதியில் ஆக்கரகந்த பெசிபன் தோட்ட பகுதியில் இன்று (13) அதிகாலை பாரிய பூமரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததனால் அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனால் டயகம, அக்கரபத்தனை, எல்ஜின் மன்ராசி, உள்ளிட்ட பல பிரதான நகரங்களுக்கும், பல நூற்றுக்கணக்கான தோட்டங்களுக்கும் செல்லும் பொது போக்குவரத்து தடைப்பட்டன.
குறித்த மரம் முறிந்து மின்சார கம்பங்கள் மேல் வீழ்ந்ததனால் மின்சார கம்பங்கள் மற்றும் மின்சார வயர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பல பிரதேசங்களுக்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பிரதான வீதியில் தடைப்பட்ட போக்குவரத்து காரணமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதனை கருத்தில் கொண்டு லிந்துலை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்தினை அகற்றியதனால் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு பின் பொது போக்வரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.
மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கடும் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஹட்டன், அக்கரபத்தனை மன்ராசி உள்ளிட்ட பல பிரதேசங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றது.
மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதன் காரணமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சைக்கு ஆயத்தமாக முடியாத நிலை காணப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் பகுதியில் ஒரு சில பிரதேசங்கள் மின்வாரம் இல்லாததன் காரணமாக பல மணித்தியாலங்கள் இருளில் சூழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மழை மற்றும் காற்று கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளன.
மலையக நிருபர் சுந்தரலிங்கம்
No comments:
Post a Comment