நாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டு, இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை என்பதே தனது நிலைப்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “ஜனநாயகம்தான் இன்று முக்கியமாகக் காணப்படுகிறது. எனினும், உலகில் எந்தவொரு நாட்டிலும் முழுமையான ஜனநாயகம் இல்லை என்றே கூற வேண்டும்.
ஒவ்வொரு நாடுகளும், தங்களுக்கு ஏற்ற வகையில் ஜனநாயகத்தை மாற்றிக் கொண்டேதான் செல்கின்றன. அந்த வகையில், இலங்கையும் அதற்கேற்ற ஜனநாயகத்தை அரசமைப்பின் ஊடாக தெரிவு செய்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை நேரடி ஜனநாயக முறைமையே சரியான ஜனநாயகமாக நான் கருதுகிறேன். இதன்படி, ’19’ ஐ முழுமையான ஜனநாயக திருத்தச் சட்டமாக ஒருபோதும் கருத முடியாது. அதற்கு நாம் அன்று வாக்களித்தோம். எனினும், அதன் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன.
ஈஸ்டர் தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்பன நல்லாட்சி காலத்தில் இடம்பெற்றன. அந்தக் ஆட்சி இறந்து விட்டது. இந்த அரசாங்கத்தினால் நான் கூறிய அந்த இரண்டு விடயங்கள் மட்டும்தான் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
அந்த ஆட்சிக்கு ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அனைவரும் ஆதரவளித்தார்கள். எனினும், அந்த ஆட்சியை மக்கள் நிராகரித்தார்கள். தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. எமது அரசாங்கம் எதிர்காலத்திலும் திருத்தச் சட்டங்களைக் கொண்டுவரும். புதிய அரசமைப்பை ஸ்தாபிக்கும்.
அத்தோடு, இரட்டைக் குடியுரிமை தொடர்பாக விமர்சிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்தே இரட்டைக் குடியுரிமை முறைமையை 19 இன் ஊடாக நல்லாட்சியினர் தடை செய்தார்கள்.
தற்போதும் இரட்டைக் குடியுரிமை எமக்குத் தேவையில்லை என்பதுதான் எமது கருத்தாக இருக்கிறது. ஆனால், அது ஒருவரை பழிவாங்க அன்றி நாட்டின் இறையாண்மையை கருத்திற்கொண்டு இரட்டை குடியுரிமை தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு” என்றார்.
No comments:
Post a Comment