(நா.தனுஜா)
அரசியலமைப்பின் 19 வது திருத்தம் மக்களிடம் அபிப்பிராயம் கோரப்படாமல் நிறைவேற்றப்பட்டமையால், மக்களிடம் அபிப்பிராயம் கோராமலேயே அதில் திருத்தங்களைச் செய்ய முடியும் என்று முன்வைக்கப்படுகின்ற தர்க்கம் நியாயமானதாகும். ஆனால் இறையாண்மையைப் பலப்படுத்துவதற்கு மக்களிடம் அனுமதி பெறத்தேவையில்லை. மாறாக அதனை வலுவிழக்கச் செய்வதெனின் நிச்சயமாக மக்களிடம் அனுமதி கோர வேண்டும். 19 வது திருத்தம் மக்களின் இறையாண்மையை ஸ்திரமடையச் செய்தது. ஆனால் அந்த வெற்றியை 20 வது திருத்தத்தின் ஊடாக மீண்டும் பின்நோக்கித் திருப்புவதாக இருந்தால் மக்கள் அபிப்பிராயம் கோரப்பட வேண்டியது இன்றியமையாததாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது அரசியலமைப்பின் 20 வது திருத்த யோசனை முன்மொழியப்பட்டிருக்கின்றது. அது குறித்து ஒரேயொரு வரியில் கூற வேண்டுமானால், அது 2010 - 2015 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்லும் என்பதேயாகும்.
இந்த 20 வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமானால் 19 வது திருத்தத்தின் எஞ்சுபவை ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக் காலம் 5 வருடங்கள், ஜனாதிபதி பதவிக்கான வரையறை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவை மாத்திரமேயாகும்.
ஜனநாயக ஆட்சி முறை ஒன்றின் மீதும் மக்களின் இறையாண்மை மீதும் 20 வது திருத்தம் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை விளக்குவதுடன் அது குறித்து மக்கள் மத்தியில் விரிவான தர்க்கம் ஏற்படுவது அவசியம் என்பதை வலியுறுத்துவதே எனது நோக்கமாகும்.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் ஊடாக இலங்கையின் ஜனாதிபதி முறை உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்ததும் மிக மோசமானதுமான ஒன்றாக மாறியது. இந்நிலையில் 19 வது திருத்தத்தின் ஊடாகப் பெற்றுக் கொண்ட அடைவுகள், வெற்றிகள் அனைத்தையும் இல்லாமல் செய்து மீண்டும் பின் நோக்கிச் செல்வதையே 20 வது திருத்த முன்மொழிவு இலக்காகக் கொண்டிருக்கின்றது.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்காமல் இருப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்தமையாகும். அதேபோன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டமையும் குறைபாடுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் 20 வது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் முழுமையாக ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதேபோன்று ரணசிங்க பிரேமதாஸ பிரதமராக இருந்த காலத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் விளைவாக அவர் ஒரு பியூனாக (அலுவலக காரியதரிசி) மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
எனினும் 19 வது திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமருக்கு அதிகளவான அதிகாரங்கள் கிடைத்தது. ஆனால் 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் மீண்டும் பியூனாகவே மாற வேண்டியிருக்கும்.
பிரதமரை எப்போது வேண்டுமானாலும் நீக்க முடியும். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி நியமிக்கும் போதும் நீக்கும் போதும் பிரதமரிடம் அபிப்பிராயம் கோர வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment