20 ஆவது திருத்தம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

20 ஆவது திருத்தம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்) 

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த, சட்ட மூல வரைபு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விஷேட நிபுணத்துவம் கொண்ட சிறப்புக் குழுவொன்றினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ளது. 

குறித்த வரைபானது, அரசியலமைப்புக்கு அனுகூலமானதா என இந்த குழு விஷேடமாக அவதானம் செலுத்தவுள்ளதுடன், அது சார்ந்த ஏனைய விடயங்களையும் ஆராய்ந்து சட்டத்தரனிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவுக்கு, அந்த விஷேட நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். 

ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமான்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த விஷேட நிபுணர்கள் குழுவில், 14 ஜனாதிபதி சட்டத்தரணிகளும் இரு சிரேஷ்ட சட்டத்தரணிகளும் உள்ளடங்குகின்றனர். 

ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமான்னவின் கீழான குறித்த குழுவில், இக்ரம் மொஹம்மட், எம்.எம்.சுஹைர், எல்.எம்.கே. அருளானந்தம், பிரஷாந்தலால் டி அல்விஸ், நிஹால் ஜயவர்தன, நலின் லத்துவஹெட்டி, மைத்திரி விக்ரமசிங்க, உதித்த இகலஹேவா, அனுர மெத்தேகொட, மொஹான் வீரகோன்,எஸ்.டி.ஜயனாக, பிரியலால் விஜயவீர, மயுரபாத குணவங்ஷ ஆகிய ஜனாதிபதி சட்டத்தரணிகளும், ரவீ அல்கம மற்றும் ஷாந்த ஜயவர்தன ஆகிய சிரேஷ்ட சட்டத்தரணிகளும் உள்ளடங்குகின்றனர். 

கடந்த 7 ஆம் திகதி, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸவுக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தார். 

அதில், குறித்த 20 ஆம் திருத்த சட்ட மூல வரைபை மிக ஆழமாக ஆராயவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் சட்டத்தரணிகள் சங்கம் தலையீடு செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார். 

விஷேடமாக ஜனாதிபதிக்கு மீளவும் விடுபாட்டுரிமையை (ஜனாதிபதி பதவிக் காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாமை) வழங்க இந்த அரசியலமைப்பு சட்ட திருத்த வரைபு ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக, தற்போது 19 ஆவது அரசியல் திருத்தம் ஊடாக விடுபாட்டுரிமை நீக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பலனாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும் என்றும், ரோயல் பார்க் கொலையாளிக்கு மன்னிப்பளித்தமை தவறு என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

அத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமனறத்தை கலைத்தபோது அது தவறு என்றும், ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றுக்கு சென்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்து தீர்ப்புக்களை பெற்றுக் கொள்ளவும் 19 ஆம் திருத்தம் ஊடாக முடியுமாயிருந்தது. 

இந்நிலையில் மீள ஜனாதிபதிக்கு விடுபாட்டுரிமையை வழங்குவதன் ஊடாக ஏற்பட வல்ல தாக்கங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். 

இவ்வாறான பின்னனியிலேயே தற்போது சட்டத்தரணிகள் சங்கம் 20 ஆம் அரசியலமைப்பு சட்டத் திருத்த வரைபு தொடர்பில் ஆராய சிறப்பு நிபுணர் குழுவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment