மாட்டிறைச்சிக்கு பின்னால் உள்ள அரசியலை அலட்சியம் செய்ய முடியாது - கிழக்கு தேசம் வஃபா பாரூக் - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

மாட்டிறைச்சிக்கு பின்னால் உள்ள அரசியலை அலட்சியம் செய்ய முடியாது - கிழக்கு தேசம் வஃபா பாரூக்

மாட்டிறைச்சியை உண்ணாவிட்டால் யாரும் செத்துவிடப் போவதில்லை. ஆனால் மாட்டிறைச்சிக்கு பின்னால் உள்ள அரசியலை அலட்சியம் செய்ய முடியாது என்று கிழக்கு தேசம் வஃபா பாரூக் தெரிவித்துள்ளார். 

தனது சாய்ந்தமருது இல்லத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், இந்தியாவில் மோடி அரசு மாட்டிறைச்சியிலிருந்துதான் இனவாதத்தை கட்டமைத்தது. மாட்டிறைச்சியின் பெயரால் பல உயிர்கள் அங்கு பலி கொல்லப்பட்டன. வீதியிலே அடித்துக் கொல்லப்பட்ட கொடூரங்களும் நடந்தேறின. 

உயிர் பலி என்ற அடிப்படையில் மாடு அறுப்பதை தடை செய்வதானால் அது நகைப்புக்குரியது. புலிகள் இறையாக்கும் மான்களுக்காக கண்ணீர் விட இயலாது. ஏனென்றால் புலிகள் புல்லைத் திண்ணாது. சிலர் பன்றி இறைச்சி உண்ண மாட்டார்கள், கோழி, மீன், கீரை ஆகியவற்றுக்கும் உயிர் உள்ளன. வணக்கத்துக்குரியதை கொல்லக்கூடாது என்றால் அதை சவாலுக்குட்படுத்த தேவையில்லை. 

இவை இரண்டிற்கும் அப்பால் தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கே இச்சட்டம் என்றால் அதில் நியாயம் இருக்கின்றது. அந்நிய செலாவணியில் பெரும் பகுதி பால்மாவை இறக்குமதி செய்வதில் செலவிடப்படுகிறது. பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் பசுக்கள் பெருக வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் இவற்றில் உண்மையான காரணம் எது என்பதை அவர்களே அறிவார்கள். எதுவாயினும் நாம் சகித்துக் கொள்ள வேண்டும். 

மோடி அரசு மாட்டிறைச்சியை உள்நாட்டில் தடை செய்து விட்டு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முயன்றது. அப்போது மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதை இஸ்லாமிய நாடுகள் ஆரம்பத்தில் தடுத்தன. காலப் போக்கில் விலையை காரணம் காட்டி அந்த தடை தளர்த்தப்பட்டது. 

இலங்கையில் மாட்டின் பெயரால் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய அசம்பாவிதங்கள் இதுவரை நடந்ததாக ஞாபகம் இல்லை. இனியும் நடந்துவிடக்கூடாது. பொருளாதார ரீதியாக மாட்டிறைச்சி மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது. சில நாடுகளில் பொருளாதாரத்தில் கூடிய ஆதிக்கம் செலுத்துகின்றது. 

எது எப்படியோ இந்த சர்ச்சை தோன்றியுள்ள சூழல் மிக முக்கியமானது. 20 ஆவது திருத்தத்திலும் உத்தேச புதிய யாப்பிலும் முழு நாடுகள் கவனத்தை செலுத்தி விவாதிக்கின்றபோது, மாட்டுக் கதையை கதைக்கத் தூண்டியது எது என்ற கேள்வி கண் முன் எழுகிறது.

No comments:

Post a Comment