இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு முடக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 2, 2020

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு முடக்கம்

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு, ஹெக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தள ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் முடக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் உலகின் பல்வேறு பிரபலங்களின் ட்விற்றர் கணக்குகள் ஹெக் செய்யப்பட்டன. இதில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரபல கோடீஸ்வரர் எலன் மாஸ்க் உள்ளிட்டோர் அடங்குவர். 

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரோந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தளத்திற்கான ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் முடக்கியுள்ளனர்.

அவரது தனிப்பட்ட இணையத்தளத்திற்கான @narendramodi_in என்ற ட்விற்றர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதனை 25 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர். இதையடுத்து தொடர்ச்சியான பல்வேறு பதிவுகளை இட்டனர்.

அதில் கொவிட்-19 பாதிப்பிற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திற்கு அனைவரும் நிதியுதவி செலுத்துங்கள். இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சி முறை பரவலாக தொடங்கியிருக்கிறது. எனவே பிட்காயின் மூலம் நிதியுதவி செலுத்துங்கள் என்று கூறி குறிப்பிட்ட குறியீடும் பதிவிடப்பட்டிருந்தது.

இது பற்றி தகவலறிந்த ட்விற்றர் நிறுவனம் உடனே மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஈ-மெயில் வாயிலாக ட்விற்றர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தளத்திற்கான ட்விற்றர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். வேறு ஏதேனும் ட்விற்றர் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறதா என விசாரணை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விற்றர் கணக்கிற்கும், பிரதமர் அலுவலகத்தின் ட்விற்றர் கணக்கிற்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.’’ எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், இது தொடர்பாக பிரதமர் அலுவலகமோ அல்லது அவரது தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment