மன்னார் புகையிரத நிலையம் மூடப்பட்டமை தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

மன்னார் புகையிரத நிலையம் மூடப்பட்டமை தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை

மன்னார் புகையிரத நிலையம் மூடப்பட்டதில் அச்சம் வேண்டாம்-Do Not Panic over Closure of Mannar Railway Station for Quarantine
மன்னார் புகையிரத நிலையம் மூடப்பட்டமை தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. வினோதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பெரியகாடு கொரோனா தனிமைப்புத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் அங்கிருந்து தப்பி வந்த நிலையில் அப்புகையிரத நிலைய அதிபர், ஊழியர்கள் கொண்ட மூவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மன்னார் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளது. இதற்கான தொற்று நீக்கலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது விடயமாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, பெரியகாடு கொரோனா தனிமைப்புத்தல் முகாமில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவர் அம்முகாமிலிருந்து கடந்த சனிக்கிழமை (12) காலை தப்பி வந்து, மன்னார் புகையிரத நிலையப் பகுதியில் ஒழிந்திருந்துள்ளார். தேடப்பட்டு வந்த இந்நபர் அன்றைய தினம் மாலை இபாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர், உடன் மீண்டும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி குவைத்திலிருந்து விமானத்தில் வந்த நிலையில், வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்படிருந்தார்.

இவர் குவைத் விமான நிலையம், இலங்கை விமான நிலையம் மற்றும் வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையம் ஆகிய மூன்று நிலையங்களிலும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் இவருடன் தங்கியிருந்த ஒரு பயணி கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டமையினால் இந்நபரும் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை காணப்பட்டிருந்தது.

இவர் மன்னார் புகையிரத நிலையத்தில் ஒழிந்திருந்த நிலையில், இவரை புகையிரத நிலைய அதிபர் மற்றும் இரு ஊழியர்கள் பிடித்து வைத்திருந்ததன் காரணமாக இவர்களும் தற்பொழுது மன்னார் புகையிரத நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வருகின்றனர்.

இவர்கள் மன்னார் புகையிரத நிலையத்திலே தங்கியிருப்பதால் இந்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் இருந்து வருகின்றது. தற்பொழுது இவர்களுக்கு PCR பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதோடு, அதன் அறிக்கை நாளை (15) கிடைக்கப்பெறும் எனவும் வினோதன் தெரிவித்தார்.

தப்பி வந்தவரிடம் மீண்டும் நான்காவது தடவையாக PCR பரிசோதனை மேற்கொண்டபோது அதிலும் இவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் என்றார். ஆகவே இது விடயத்தில் எவரும் அச்சப்படத் தேவையில்லையென அவர் தெரிவித்தார்.

புகையிரத அதிபர் ஊழியர்களை புகையிரத நிலையத்தில் தனிமைப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு புகையிரத திணைக்களத்தாலேயே எடுக்கப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(தலைமன்னார் நிருபர் - வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment