இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில். ஈடுபடுவதனால், மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தொழில் உபகரணங்கள் நாசமாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். கரையில் இருந்து சுமார் ஒன்பது கடல் மைல் தூரத்தில் நின்று மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட றோளர் படகினைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடலில் விடப்படும் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக மிக அதிகளவில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகிறது. இதனைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள், வாயை மூடிக் கட்டி மெளன கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
நல்லூர் முன்றலில் இருந்து காலை 11 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த மெளன கவனயீர்ப்பு பேரணியானது, இந்தியத் தூதரகத்தைச் சென்றடைந்து அங்கு இந்தியத் துணைத் தூதரிடம் மகஜர் ஒன்ரைக் கையளித்தனர்.
இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் தெரியப்படுத்தி, இதனால் தமது வாழ்வாதாரப் பாதிப்பு மற்றும் உடமைகள் சேதமாக்கப்படுவது தொடர்பில் எடுத்துக் கூறி எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துமாறு, துணைத் தூதுவரிடம் கோரினர்.
தொடர்ந்து நீரியல் வளத்துறை அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
தொடர்ந்து நீரியல் வளத்துறை திணைக்களம், மாவட்டச் செயலகம் இறுதியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று ஆளுநருக்கு மகஜர் ஒன்றை கையளித்து தமது போராட்டத்தை நிறைவு செய்தனர்.
No comments:
Post a Comment