பாறுக் ஷிஹான்
கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரைத் தாக்கியதாக சந்தேக நபரை கல்முனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (29) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைப் பிரிவிற்கு காயமொன்றிற்கு சிகிச்சைக்காகச் சென்ற இருவர், அங்கு கடமையிலிருந்த வைத்தியருடன் முரண்பட்டுள்ளனர்.
பின்னர் நோயாளியுடன் வந்த நபரை வெளியேற்ற நடவடிக்கையெடுக்கப்பட்ட பின்னர், ஏற்பட்ட வாக்குவாதம் சிறு கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் சிறு காயங்களுக்குள்ளான வைத்தியர், அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 41 வயதுடைய சந்தேக நபர் வைத்தியரின் முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை இன்று (30) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 43 வயதுடைய மருதமுனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரே காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment