பாறுக் ஷிஹான்
கஞ்சாவினை சூட்சுமமாக மறைத்து விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் உட்பட நால்வரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (29) மாலை அம்பாறை நிந்தவூர்ப் பிரதேசத்தில் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர் நடமாடுவதாக சம்மாந்துறை இரகசியப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையினால் 47 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரை கஞ்சாவுடன் கைது செய்தனர்.
கைதான பெண்ணிற்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் 4 வழக்குகள் உள்ளதாகவும், நிந்தவூர் பகுதியில் கஞ்சாவினை விநியோகம் செய்யும் கொட்டாள் என்று அழைக்கப்படும் முக்கிய நபர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடந்த 2014 ஆண்டிலிருந்து இச்சட்டவிரோதச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும், பொலிஸ் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
அதேவேளை, குறித்த பெண்ணிடம் கஞ்சாவினை வாங்கியவர்கள் என்ற சந்தேகத்தில் 3 பேரும் அச்சந்தரப்பத்தில் சம்மாந்தறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைதான நால்வரும் இன்றைய தினம் (30) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment