உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது - சீனா குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது - சீனா குற்றச்சாட்டு

சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சீன ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் படிப்படியாக வளர்ந்து தற்போது கொரோனா வைரஸ் விவகாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. 

கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டதாக குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சீன ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. 

அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில் சீன ராணுவம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக சீனா ராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு கியான் கூறுகையில் “பிராந்திய அமைதியின்மையை தூண்டுவது, சர்வதேச ஒழுங்கை மீறுவது, உலக அமைதியை அழிப்பது அமெரிக்காதான் என்பதை பல ஆண்டு சான்றுகள் காட்டுகின்றன. 

கடந்த 20 ஆண்டுகளாக ஈராக், சிரியா, லிபியா மற்றும் பிற நாடுகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 

தன்னைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக அமெரிக்கா சீனாவின் இயல்பான பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டுமானம் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அமெரிக்கா அதனை நிறுத்தி விட்டு இருதரப்பு ராணுவ உறவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கூறினார்.

No comments:

Post a Comment