20 ஆவது திருத்தத்தை அரசு வாபஸ் பெற வேண்டும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் திருத்தங்களுக்கு ஆதரவு என்கிறார் சஜித் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

20 ஆவது திருத்தத்தை அரசு வாபஸ் பெற வேண்டும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் திருத்தங்களுக்கு ஆதரவு என்கிறார் சஜித்

20ஆவது திருத்தத்தை அரசாங்கம் வாபஸ் பெற்று அனைவருடனும் கலந்துரையாடி ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான திருத்தங்களை கொண்டுவந்தால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தின் கெளரவத்தை சீரழிக்கும் வகையிலே 20ஆவது திருத்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 19ஆவது திருத்தத்தில் இருக்கும் ஜனநாயகத்தை பாதுகாத்து உறுதிப்படுத்தும் விடயங்கள் அனைத்தும் இதன் மூலம் நீக்கப்பட்டுள்ளது. 

ஜனநாயக்தை நேசிப்பவர்கள் எவரும் இதற்கு ஆதரவளிக்கமாட்டார்கள். பணத்துக்காகவும் அமைச்சுப் பதவி மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களுக்காகவும் காட்டிக் கொடுப்பவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை. 

ஜனநாயக ஆட்சி ஒன்றின் கெளரவத்தை பாதுகாக்கும் வகையிலே 19 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தோம். இதில் குறைபாடுகள் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காக தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி, அரசியலமைப்பு திருத்தம் மூலம் தேசிய பாதுகாப்பு பேரவை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். 

19 இல் இருக்கும் அதிகமானவை ஜனநாயகத்தை பாதுகாக்கும் விடயங்களாகும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். அந்த அதிகாரம் விரிவுபடுத்தப்பட வேண்டும். பொம்மை ஜனாதிபதியோ காரியாலய உதவியாளர் போன்ற பிரதமரோ எமக்கு தேவையில்லை.

No comments:

Post a Comment