(இராஜதுரை ஹஷான்)
அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்கள் தெளிவுபெற வேண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் தவறான வழியில் பயன்படுத்துகிறது. பாராளுமன்றில் சுட்டிக்காட்டப்படும் விடயங்கள் மக்கள் மத்தியில் முழுமையாக சென்றடைகின்றதா என்ற சந்தேகம் தோற்றம் பெறுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் திருத்தத்திற்குள் எவ்வித விடயங்களை உள்ளடக்குகிறோம் என்று குறிப்பிடவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் ஏற்பாடுகளும் மறைமுகமாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்கள் முதலில் தெளிவு பெற வேண்டும். அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பாராளுமன்றத்தின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு நிறைவேற்றுத் துறையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியமைப்பினை மீறி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி பாரிய விளைவுகளை ஏற்படுத்தினார். நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு இவரது செயற்பாடு பிரதான பங்கு வகித்தது.
அரசியமைப்பினை திருத்துவதற்காகவும், புதிய அரசியமைப்பினை உருவாக்குவதற்காகவும் மக்கன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கியுள்ளார்கள் என ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுக் கொண்டு பெரும்பான்மை பலத்தை முறைகேடாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆகவே 20 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்கள் முதலில் தெளிவு பெற வேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் விடயங்களை எதிர்க்க வேண்டிய தேவை எதிர்தரப்பினருக்கு கிடையாது.
No comments:
Post a Comment