ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரத்தை 20 வது திருத்தம் மேலும் வலுப்படுத்தியுள்ளது : மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 7, 2020

ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரத்தை 20 வது திருத்தம் மேலும் வலுப்படுத்தியுள்ளது : மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

புதிய செயலணிகளின் உருவாக்கம் நல்லிணக்கம், நிலைமாற்றுக்கால நீதிக்கான  வாய்ப்புகளை பாதிக்கும் - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் - News View
(நா.தனுஜா)

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட ஏற்பாடுகள் கடந்த காலத்தில் காணப்பட்ட பரந்தளவிலான ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரத்தை நீக்குவதுடன் வலுவேறாக்கத்தை வலுப்படுத்தி நிலையான தன்மையினையும் மேம்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. எனவே நாட்டை முன்நிறுத்திய முக்கிய தீர்மானங்கள், அவை தொடர்பான முழுமையான அறிவினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களாக அமைய வேண்டும். ஆகவே மக்கள் இவ்விடயங்கள் பற்றிய தெளிவுடையவர்களாக இருக்க வேண்டும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியிருக்கிறது. 

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்த யோசனையில் 19 வது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பல முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த முக்கிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த நிலையில், இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது.

அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தத்தினை பாராளுமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. அந்தத் திருத்தம் பிரதான வழிமுறைகள் நான்கின் ஊடாக நல்லாட்சியைப் பலப்படுத்துகின்றது. நிறைவேற்றுத்துறையில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோருக்கு இடையிலான அதிகாரங்களை மீள்சமநிலைப்படுத்தியதன் ஊடாகவும் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை என்பவற்றுக்கு இடையிலான அதிகாரங்களை மீள்சமநிலைப்படுத்தியதன் ஊடாகவும் அரசியலமைப்புப் பேரவையின் உருவாக்கத்தின் மூலம் அரச உயர் பதவிகளுக்கான நியமனச் செயன்முறையில் அரசியல் மயமாக்கம் உள்புகுவதைத் தடுத்தமையின் ஊடாகவும் பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, நீதி நிர்வாகம், இலஞ்சம் ஊழல் ஒழிப்பு, மனித உரிமைகள் போன்ற முக்கிய விடயங்க்ளை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் ஆகியவையே அந்த நான்குமாகும். 

குறிப்பாக ஜனாதிபதியின் வசமிருந்த நிறைவேற்று அதிகாரம் தற்போது பிரதமர் மற்றும் பாராளுமன்றத்திற்குப் பகிரப்பட்டுள்ளது. இதன் விளைவாக பிரதமர் மற்றும் அமைச்சரவையின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஜனாதிபதியால் ஒருதலைப்பட்சமாக பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ முடியாது. 

பிரதமர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை அனுபவிப்பதற்கு உரித்துடையவராக இருக்கின்றார் என்பதுடன் ஏனைய அமைச்சர்கள் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் மாத்திரமே நியமிக்கப்படவும் பதவி நீக்கப்படவும் முடியும். 

மேலும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளின்றி பிரதமர் பதவி நீக்கப்பட முடியாது. பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தின் இறுதி ஆறு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றமே அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றக் கலைப்பைக் கோரினாலன்றி, பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. 

19 வது திருத்தத்திற்கு முன்னர் வரை பாராளுமன்றப் பதவிக் காலத்தில் ஒரு வருடம் நிறைவுற்றதும் ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும். அரசியலமைப்பின் 19 வது திருத்தம் பாராளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக் காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைக்கின்றது. 

ஜனநாயக நாடுகளில் 6 வருட பதவிக் காலத்தை விடவும் 5 வருட பதவிக்காலமே கூடுதலாகக் காணப்படுகின்றது. இதனால் அர்த்தப்படுவது யாதெனில், ஜனாதிபதியோ அல்லது பாராளுமன்றமோ மக்களால் மீண்டும் தெரிவு செய்யப்படாமல் நீண்ட காலத்திற்குத் தம்முடைய அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியாது என்பதும் ஜனாதிபதியின் முக்கியத்தும் வாய்ந்த அதிகாரங்களை எந்தவொரு நபரும் மிக நீண்ட காலத்திற்குப் பிரயோகிக்க முடியாது என்பதுமாகும். 

மிக முக்கியமான ஒரு நபர் இரு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட இயலும். இரண்டு பதவிக் காலங்களுக்கு மாத்திரமே ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்ற மட்டுப்பாடு ஜனநாயகத்தில் இன்றியமையாத விடயமாக இருக்கின்றது. 

இந்த ஏற்பாடுகள் கடந்த காலத்தில் காணப்பட்ட பரந்தளவிலான ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரத்தை நீக்குவதுடன் வலுவேறாக்கத்தை வலுப்படுத்தி நிலையான தன்மையினையும் மேம்படுத்துகின்றது.

No comments:

Post a Comment