
(நா.தனுஜா)
உங்களுடையதும், நாட்டினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற அதியுயர் அதிகாரமுடைய பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் எவ்வித அச்சமும், சந்தேகமுமின்றி இயலுமான வரையில் விரைவாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதந்து தமது வாக்கினைப் பதிவுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியிருக்கிறது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்வதற்கான பொதுத் தேர்தல் இன்றையதினம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டு மக்கள் அனைவரையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதந்து தமது வாக்குரிமையினைப் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து ஆணைக்குழு மேலும் கூறியிருப்பதாவது உங்களுடையதும், நாட்டினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற அதியுயர் அதிகாரமுடைய பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தல் சுதந்திரமானதும், அமைதியானதும், சுயாதீனமானதும், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாகவும் நடைபெறுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸார், சுகாதாரப் பிரிவினர் மற்றும் அரசாங்க சேவையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் தற்போதும் அவர்கள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் வாக்களிப்பதற்கு அவசியமான அனைத்துவிதமான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளும் வாக்களிப்பு நிலையங்களில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், அது உங்களுடைய இல்லங்களை விடவும் பாதுகாப்பானதாகும். எனவே எவ்வித அச்சமோ அல்லது சந்தேகமோ இன்றி, தேர்தல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சட்டநடைமுறைகளை மீறாமல் இயலுமான வரையில் விரைவாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதந்து தமது வாக்குகளைப் பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment