புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார், கிழக்கு மாகாண சபை தமிழ் மக்களிடம் வர வேண்டும் - பிரசாந்தன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 11, 2020

புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார், கிழக்கு மாகாண சபை தமிழ் மக்களிடம் வர வேண்டும் - பிரசாந்தன்

புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்
எதிர்வரும் 20 ம் திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வார். அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வாவிக்கரையில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இருந்த மக்கள் 2015 நல்லாட்சி தொடக்கம் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு அபிவிருத்தியிலும் தனித்துவத்திலும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே இந்த முறை மக்கள் வழங்கியிருக்கும் செய்தியானது கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே.

அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சிரமேற்று சி. சந்திரகாந்தன் தலைமையில் முன்னெடுத்துச் செல்லும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அதிகமான வாக்குகளை வழங்கி 4 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்துள்ளனர்.

எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சி கொள்கை சாந்தவர்களாக இருந்தாலும் அரசியல் என்பது மக்களுக்காகவே தவிர தாங்கள் சார்ந்த கட்சிக்காகவே அரசியல் இருப்புக்காக அல்ல என்பதனை வெளிப்படையாக புரிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் ஒரே கூரையின் கீழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்காக ஒரே கூரையின் கீழ் பயணிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுகின்றது.

அதேபோன்று தமிழர்களின் வசமிருந்த கிழக்கு மாகாண சபை தமிழ் மக்களிடம் வர வேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் உறுதியாக இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக போட்டியிடவில்லை அந்த மாவட்ட தமிழ் மக்களை நடுக்கடலில் விட என்றும் தயாராகவில்லை.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டியிடும். தமிழர்கள் ஆண்ட சபையை பிள்ளையான் மீண்டும் தமிழர்கள் ஆள்வதற்காக தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயாராக இருக்கின்றது.

தடுப்பு காவலில் இருக்கின்றபடியினால் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமையின் கீழ் எதிர்வரும் 20 ம் திகதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற அமர்வுக்கு அவர் செல்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்றம் சென்ற பிற்பாடே ஏனைய நடைமுறைகள் முன்னெடுக்கப்படும்

பிணைக்கு அப்பால் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது பிணையில் விடுதலை செய்ய முடியாது. சட்டம் பல போரளிகள் இன்றுவரைக்கும் சிறையில் இருக்கின்றனர். ஆனால் முதலமைச்சராக இருந்தவருக்கு பயங்கரவாத தடைச்சட்டம் போடப்பட்டது என்பது மிகவும் வேடிக்கைக்குரிய விடயம்.

எது எப்படியாக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் அவர் வெளிவருவதற்கான அனைத்து விடயங்களுடம் சட்டப்படி முடிவடைந்துள்ளது. அதற்காக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். மிகவிரைவில் சட்டத்திற்கு முன் அவர் நிரபராதியாக வெளியில் வருவார். ஏன அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment