ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர்ப் படுகொலையின் 30வது ஆண்டு 30வது நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு படுகொலை செய்யப்பட்டவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஏறாவூர் காட்டுப் பள்ளிவாசலில் புதன்கிழமை 12.08.2020 அதிகாலைத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றதாக நினைவுப் பேரவையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
1990ஆம் ஆண்டு ஏறாவூர் நகரிலும் அதனை அண்டிய கிராமங்களிலும் ஒரே இரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குலினால் ஸ்தலங்களிலேயே 121 பேர் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக வருடாவருடம் 'ஏறாவூர்- ஸூஹதாக்கள் நினைவுப் பேரவையினால் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நினைவுப் பேரவையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற ஸூஹதாக்கள் (சொர்க்கவாசிகள்) பிரார்த்தனை நிகழ்வுகளில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் படுகொலை நிகழ்வின்போது காயமடைந்து சுகமடைந்தவர்கள் மார்க்க அறிஞர்கள் சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்கள் ஊர்ப்பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு ஏறாவூரிலும் ஏறாவூரைச் சூழவுள்ள ஆற்றங்கரை, ஓட்டுப்பள்ளி, புன்னைக்குடா வீதி, ஐயங்கேணி, மீராகேணி, சத்தாம்ஹூஸைன் ஆகிய கிராமங்களிலும் நள்ளிரவு வேளையில் தூக்கத்திலிருந்த நிலையில் 121 முஸ்லிம்கள் சுட்டும், வெட்டியும், குத்தியும், தீயிட்டும், அடித்தும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். மேலும் சுமார் 200 பேருக்கும் மேற்பட்டோர் அவ்வேளையில் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் பிரார்த்தனை நிகழ்வு வருடாவருடம் இடம்பெற்றுவருகின்றது.
No comments:
Post a Comment