நாட்டில் அமைதியை நிலைநாட்ட 2500 பொலிஸார் புலனாய்வு செயற்பாடுகளில் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 6, 2020

நாட்டில் அமைதியை நிலைநாட்ட 2500 பொலிஸார் புலனாய்வு செயற்பாடுகளில் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய ...
(செ.தேன்மொழி)

தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்காக 2500 பொலிஸரை புலனாய்வு செயற்பாடுகளில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, வாக்கு எண்ணும் பணிகள் பாதுகாப்பான முறையில் இடம்பெற்று வருகின்றன. கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இம்முறை தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமையவே மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டிருந்தது. 

இந்நிலையில் வாக்களிப்பு இடம்பெற்ற தினம் காலை முதல் இன்று வியாழக்கிழமை வரை 350 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன்போது பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது 175 சட்டமீறல் செயற்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன், பொதுமக்களால் 175 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. 116 முறைப்பாடுகள் தேர்தலுடன் தொடர்பு கொண்டுள்ள வேறு வகையான குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.

இந்த வேறுவகையான முறைப்பாடுகளில், தாக்குதல், அச்சுறுத்தல் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தல் தொடர்பிலே 110 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன. இதில் தாக்குதல் தொடர்பில் 49 முறைப்பாடுகளும், அச்சுறுத்தல் தொடர்பில் 44 முறைப்பாடுகளும், பாதிப்புகளை ஏற்படுத்தியமை தொடர்பில் 14 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்போது எம்பிலிபிட்டி பகுதியிலேயே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், அவை 55 ஆக பதிவிடப்பட்டுள்ளன. இதேவேளை கந்தளாயில் 39 முறைப்பாடுகள், அம்பாறையில் 25 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. 

வேறு வகையான முறைப்பாடுகள் அதிகளவில் அம்பாறை மாவட்டத்திலே பதிவாகியிருந்ததுடன், அவை 18 முறைப்பாடுகளாகும். அதற்கமைய இந்த செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பில் 15 முறைப்பாடுகளும், அநுராதபுரத்தில் 10 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் 2015 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை குறைவானா முறைப்பாடுகளே கிடைக்கப் பெற்றுள்ளது. 

இதேவேளை வாக்கு எண்ணும் காலப்பகுதியில், நாட்டின் அமைத்தியை பாதுகாப்பதற்கும், வாக்கு எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கும் பொலிஸ் நடமாடும் சேவை தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதில் 3069 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை சோதனைச்சாவடிகள் 269 தொடர்ந்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மேலதிகமான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3140 அதிகாரிகள் வாக்கு எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கும், வீதிச் சோதனைச் சாவடிகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் 2500 பொலிஸார் நடளாவிய ரீதியில் புலனாய்வு செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை தேர்தல் ஆணைக்குழு மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment