(செ.தேன்மொழி)
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று (24) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நபர்களை தடுத்து வைக்கும் பிரிவிற்கு அருகில் குழியொன்றை தோண்டி அதில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
வெலிக்கடைச் சிறைச்சாலை அதிகாரிகள் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளின் அறைக்குள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போதே அறைக்குள் புதைக்கப்பட்டு வைத்திருந்த 19 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிறைச்சாலைக்குள் காணப்படும் தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசேட அவதானம் செலுத்தியுள்ளதுடன், சிறைச்சாலைக்குள் ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றுவதற்கும், மேலும் இவ்வாறான பொருட்கள் கொண்டு வரப்படாமல் இருப்பதற்காகவும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமையவே இவ்வாறான தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்ந்தும் கைப்பற்றப்பட்டு வருவதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment