சோமாலியாவைப் போன்று மாறவிருந்த இலங்கையை முறையான வேலைத்திட்டங்கள் மூலம் பாதுகாத்துள்ளோம் : பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

சோமாலியாவைப் போன்று மாறவிருந்த இலங்கையை முறையான வேலைத்திட்டங்கள் மூலம் பாதுகாத்துள்ளோம் : பாதுகாப்பு செயலாளர்

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு ...
(எம்.மனோசித்ரா)

சோமாலியாவைப் போன்று மாறவிருந்த இலங்கையை முறையான வேலைத்திட்டங்கள் மூலம் பாதுகாத்துள்ளோம். அரச புலனாய்வுப் பிரிவு, இராணுவ, பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, விஷேட அதிரடிப் படை என்பவற்றுடன் சிறைச்சாலையையும் ஒன்றிணைத்து நுட்பமாக செயற்பட்டமையால் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுத்திருக்கின்றோம் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறிய அவர், நாட்டில் பெரிய சிறைச்சாலையாகக் கருதப்படும் வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலை, ரிமான்ட் சிறைச்சாலை உள்ளிட்டவற்றில் தினமும் கைதொலைபேசிகளும் போதைப் பொருள் பொட்டலங்களும் சிம் அட்டைகளும் கைப்பற்றப்படுகின்றன. இவை அனைத்தும் சிறைச்சாலைக்குள் எவ்வாறு செல்கிறது என்று ஆராயும்போது நுழைவாயில்களிலேயே இதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுவதாக அறியக்கிடைத்துள்ளது.

எனவேதான் வெலிக்கடை சிறைச்சாலை உள்ளிட்ட மேற்கூறிய ஏனைய சிறைச்சாலை நுழைவாயில்களை பொலிஸ் அதிரடிப் படையினரிடம் ஒப்படைத்துள்ளோம். இதன் மூலம் அநாவசியமாக சிறைச்சாலையில் முன்னெடுக்கப்படுகின்ற சட்ட விரோத செயற்பாடுகளை தடுக்க முடியும்.

அதேபோன்று சிறைச்சாலை அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் விஷேட சோதனைகளை முன்னெடுக்கும் போது விஷேட அதிரடிப் படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும். இது சிறைச்சாலை அதிகாரிகளுடைய செயற்பாடுகளுக்கும் பக்க பலமாக அமையும்.

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்தல், போதைப் பொருள் பாவனையை ஒழித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் போன்றவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும். இலங்கை இதற்கு முன்னர் சென்ற போக்கிலேயே எதிர்வரும் 4 - 5 வருடங்களும் பயணித்திருக்குமாயின் யாருக்கும் வீதியில் சுதந்திரமாக செல்லக்கூடிய சூழல் இருந்திருக்காது.

எமது நாடும் சோமாலியாவைப் போன்றாகியிருக்கும். எனினும் நாம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன் மூலமும் அரச புலனாய்வுப் பிரிவு, இராணுவ, பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, விஷேட அதிரடிப் படை என்பவற்றுடன் சிறைச்சாலையையும் ஒன்றிணைத்து நுட்பமாக செயற்பட்டமையாலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுத்திருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment