இன்று (28) பிற்பகல் முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான நிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், ஒரு சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். ஏனைய இடங்களில், பிற்பகலில் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போதான மின்னல் மற்றும் தற்காலிகமான பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பேருவளையிலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரை கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல் அலை உயர்வடைவதனால், அலைகள் நிலப்பகுதியை நோக்கி வருவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடற்கரையை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment