மின்சார கட்டணத்திற்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் - ஜனகன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

மின்சார கட்டணத்திற்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் - ஜனகன்

கொவிட் 19 வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நாட்டு மக்களால் நுகரப்பட்ட அதிகரித்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் இன்று மக்களுக்கு ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த பிரச்சினைக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ கணேசனுடன் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கட்சிக் காரியாலயத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

குறிப்பாக பொதுமக்கள் தற்போது பெருமளவில் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கான மொத்த மின்சார கட்டணத்தையும் அவர்களின் மேல் திணிப்பதால் இன்னமும் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மூன்று மாதக் கட்டணங்களை எவ்வாறு மொத்தமாக செலுத்துவது அல்லது அதற்கான வருமானத்தை எவ்வாறு ஈட்டிக் கொள்வது என்ற குழப்பமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த மூன்று மாதங்களாக பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே தங்கவைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. கொவிட் 19 தொற்று நோய் பாதிப்பு காரணமாக இந்த அவசர காலநிலையை அமுல்படுத்த வேண்டிய தேவை இருந்தது.

அந்த காலகட்டத்தில் முன்னர் பயன்படுத்திய மின்சாரத் தேவைக்கும் மேலதிகமாக மின்சாரத்தை நுகர வேண்டிய தேவை மக்களுக்கு இருந்தது.

அதேவேளை, மின்சார பாவனை மானியை கடந்த மூன்று மாதங்களாக அளவீடு செய்யாமல் ஒரே நேரத்தில் அதனை அளவீடு செய்தமையாலும், அந்த அளவீட்டுக்கு ஒரு நிலையான பெறுமதியை வழங்கி அதனை மின்சார கட்டணமாக மாற்றியதும் அளவுக்கு அதிகமாக மின்சார கட்டணம் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

எனவே, மூன்று மாதங்களாக வீட்டுக்குள் அடங்கியிருந்தமை மக்களுடைய குற்றம் அல்ல, அதனால் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மக்களுக்கான நிவாரணத்தை கட்டாயமாக வழங்க வேண்டும்.

இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளிலும் இவ்வாறான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்களின் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் மீளமைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அரசாங்கத்தின் நிவாரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி எமக்கு கிடைத்த தகவல்களின் படி, அதிகரித்த மின்சார கட்டணங்கள் தொடர்பாக மக்கள் சிலர் மின்சார சபைக்கு சென்று முறையிட்ட போது அவர்கள் அதற்கு கழிவுகளை வழங்கியுள்ளார்கள்.

அதன்படி, மின்சார பாவனையாளர்கள் தங்களின் கட்டணப்பட்டியலில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அல்லது கூடிய கட்டணங்கள் அறவிடப்பட்டிருப்பின் தங்கள் பிரதேசத்திற்கு உரிய அலுவலகங்களுக்கு சென்று முறையிடுமாறு கலாநிதி வி,ஜனகன் கேட்டுக் கொண்டார்.

இதுதவிர அரசாங்கமும் இந்த சந்தர்ப்பத்தில் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருக்கும் பொதுமக்களிடம் லாபத்தை நோக்கமாக கொள்ளாமல் உரிய நிவாரணத்தை வழங்கவேண்டும் என்றும் கலாநிதி வி.ஜனகன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment