இன்று (05) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள பழைய காலி வீதி, ஹொரேதுடுவ பிரதேசத்தில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவ திசையிலிருந்து பாணந்துறை நோக்கு பயணித்த குசல் மெண்டிஸ் பயணித்த கார், துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் 64 வயதான பாணந்துறை, கொரகபொல பிரதேசத்தைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் காரை செலுத்தி வந்த குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை இன்றையதினம் (05) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment