போதைப் பொருள் கடத்திய 61 பேருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 582 மரண தண்டனை விதிப்பு வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, 160 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் 4338 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவற்றை வைத்திருந்த மற்றும் கடத்திய 1,65257 பேர் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 27,500 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 2,52,259 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 1828 கிலோ கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1828 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்புத் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிகூடிய தண்டனையாக மரண தண்டனையை விதிக்க முடியும். 582 மரண தண்டனை வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருவதுடன், 61 பேருக்கு இந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வலையமைப்பை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு முற்றாக ஒழித்துள்ளது. தொடர்ந்தும் போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment