ஜனாதிபதி நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்தி, அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார் - ஹர்ஷண ராஜகருணா - News View

About Us

Add+Banner

Saturday, May 17, 2025

demo-image

ஜனாதிபதி நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்தி, அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார் - ஹர்ஷண ராஜகருணா

03.00_05_10_12.Still233
(எம்.மனோசித்ரா)

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்ற அநுரகுமார திசாநாயக்க, தற்போது அதனை மேலும் பலப்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கிறார். அவ்வாறு பலவந்தமாக ஜனாதிபதியால் எதனையும் நடைமுறைப்படுத்த இடமளிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகக்கூறி ஆட்சியைப் பொறுப்பேற்ற அநுரகுமார திசாநாயக்க, தற்போது அதனை மேலும் பலப்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கின்றார். சட்டத்தை மாற்றியேனும் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்போம் என ஜனாதிபதி கூறுகின்றார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்பதற்காக சட்டத்தை மாற்றி அரசியலமைப்பினை மீறி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு சஜித் பிரேமதாச தலைமையில் ஜனநாயக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வியட்நாமிலிருந்து தனியார் ஜெட்டில் ஜனாதிபதி நாட்டுக்கு வந்தார். அதற்கான செலவு குறித்து கேள்வியெழுப்பியபோது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பல்வேறு மழுப்பல் பதில்களையே வழங்கினார். அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கூறிக் கொண்டிருக்காமல் உண்மையில் அந்த ஜெட் விமானத்துக்கான செலவை ஏற்றுக் கொண்டது யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று உப்பைக்கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. உப்பு இறக்குமதியின் பின்னணியில் மாபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கின்றோம். இதேநிலைமையே வாகன இறக்குமதியிலும் காணப்படுகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகின்ற போதிலும், இவர்களுக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியவில்லையல்லவா?

நாட்டை நிர்வகிப்பது ஜே.வி.பி. நினைத்ததைப் போன்று இலகுவான விடயமல்ல என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்து கொண்டிருப்பர் என்று நம்புகின்றோம்.

சஜித் பிரேமதாச தலைமையில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட மேலும் பல உள்ளூராட்சி மன்றங்களில் நாம் ஆட்சி அமைப்போம் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *