ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 28, 2020

ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது - ஜீவன் தொண்டமான்

ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும், ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும் பின்பற்றியதாக எனது அணுகுமுறை அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனையில் நேற்று (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. ஆனால், கூடுதலாக இரண்டு கிலோ கொழுந்தும், இறப்பர் தோட்டங்களில் மேலதிகமாக ஒரு கிலோவும் எடுக்கப்படவேண்டும் என கூறுகின்றனர். இதற்கு நாம் உடன்பட முடியாது. அந்த கோரிக்கையை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார். கம்பனிகள் வெள்ளையர் காலத்தில் போல் தான் தற்போது செயற்படமுற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பேச்சுவார்த்தை என்பது தேர்தல் நாடகம் என்று சிலரால் விமர்சிக்கப்படுகின்றது. சம்பளத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டிய தேவை இ.தொ.காவுக்கு கிடையாது. ஏனெனில் மக்கள் எம்பக்கமே உள்ளனர்.

அப்பா இறந்த பின்னர் சில தோட்டங்களில் துரைமார் ஆட ஆரம்பித்துள்ளனர். நாம் தற்போது அமைதியாக இருக்கின்றோம். இந்நிலையில் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் ஏன் இந்த அமைதி என சிலர் கேட்கின்றனர். பொறுமைக்கும், அமைதிக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. நாம் பொறுமையாகவே இருக்கின்றோம். அதனை பலவீனமாகக்கருதவேண்டாம்.

மக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன். ஆறுமுகன் தொண்டமான் போய்விட்டார், இ.தொ.காவின் கதை முடிந்துவிட்டது என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். யார் எதனை வேண்டுமானாலும் நினைத்துவிட்டுபோகட்டும். மக்களுக்காக எப்போதும் காங்கிரஸ் செயற்படும்.

கடந்தகாலங்களில் கட்சி அடிப்படையிலேயே வீடுகள் பகிரப்பட்டன. கிராமங்களை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது திட்டமாகும். இளைஞர்களின் வேலையிண்மை பிரச்சினையை தீர்க்கவேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. மலையக பல்கலைக்கழகம் வந்த பின்னர், ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் சுற்றுலாத்துறையில் கூடுதல் வேலைகளைப்பெறலாம் என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment