நான் இருக்கும் வரை மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது, கண்டியிலிருந்து பரசூட் அரசியல்வாதிகள் வந்துள்ளனர் - பழனி திகாம்பரம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 28, 2020

நான் இருக்கும் வரை மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது, கண்டியிலிருந்து பரசூட் அரசியல்வாதிகள் வந்துள்ளனர் - பழனி திகாம்பரம்

திகாம்பரம் இருக்கும் வரை மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது. கடந்த நான்கரை வருடங்களில் எவரும் சீண்டவும் இல்லை. சேவைகளை செய்துகாட்டிவிட்டே வாக்கு கேட்டுவந்துள்ளேன். மக்கள் உணர்வுப்பூர்வமாக வாக்களிப்பார்கள் என்பது உறுதி என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொத்மலையில் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நான் அமைச்சரான பின்னர் நான்கரை வருடங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுத்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும். மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சேவைகள் செய்துள்ளோம்.

ஆனால் தேர்தல் காலத்தில் கண்டியில் இருந்து பரசூட் அரசியல்வாதிகள் இங்கு வந்துள்ளனர். மக்கள் மத்தியில் பொய்யுரைத்து வாக்குகளை பிரிப்பதற்கு முயற்சிக்கின்றனர். நாம் இங்கேதான் பிறந்தோம். இந்த மண்ணில்தான் வாழ்கின்றோம். வென்றாலும் தோற்றாலும் இங்கிருந்து வெளியில் செல்லமாட்டோம்.

ஏற்கனவே ஒருவர் வந்தார். தேர்தலில் நின்றார். வென்றதும் ஓடிவிட்டார். ஆனால், எமது இளைஞர்கள் விழித்துக்கொண்டனர். அத்தகைய வேட்பாளர்களுக்கு இம்முறை தோல்வி உறுதி. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேல் வீடுகளை கட்டினேன். 8 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுவந்தன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிதி நிறுத்தப்பட்டது. ஆனால், கண்தெரியாத சிலர் 2 ஆயிரம் வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன என கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் வீடமைப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். வேலைகளை செய்துவிட்டுவந்துதான் நாம் வாக்கு கேட்கின்றோம். மக்களாகிய நீங்கள் யாருக்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கின்றேன்.

தோட்டதுரைமார் மதிக்கமாட்டார்கள், பொலிஸார் அடிப்பார்கள் என சிலர் இன்று கருத்து வெளியிடுகின்றனர். அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். கடந்த நான்கரை வருடங்களில் எமது மக்களை எவரும் சீண்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்.

எமது மக்களுக்கு 50 ரூபாவை எடுத்துக்கொடுப்பதற்கு முயற்சித்தேன். துரோகி நவீன் அதற்கு இடமளிக்கவில்லை. எமது மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். விலைபோகமாட்டார்கள். நுவரெலியாவில் 5 பிரதிநிதித்துவத்தை கடந்தமுறை வென்றெடுத்தனர். இம்முறையும் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள். போலி வேட்பாளர்களை நம்பவேண்டாம் என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment