இலங்கையிலிருந்து 700 இந்தியர்களுடன் பயணித்த ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடியை சென்றடைந்தது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

இலங்கையிலிருந்து 700 இந்தியர்களுடன் பயணித்த ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடியை சென்றடைந்தது

கடந்த மூன்று மாத காலத்திற்கு அதிகமான காலம் இலங்கையில் தங்கியுள்ள இந்திய பிரஜைகளை மீண்டும் அந்த நாடுகளுக்கு அழைத்து செல்ல கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வா நேற்றுமுன்தினம் கொழும்பில் இருந்து 700 இந்திய பிரஜைகளுடன் இந்தியா நோக்கி பயணமாகியது.

இந்நிலையில், நேற்று (02.06.2020) குறித்த கப்பல் தூத்துக்குடியை சென்றடைந்துள்ளது.

கொவிட்-19 நோய் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக இலங்கையில் சிக்கியிருந்த 700 இந்திய பிரஜைகளுடன் இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வா 2020 ஜூன் முதலாம் திகதி கொழும்பிலிருந்து இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தூத்துக்குடிக்கான பயணத்தினை மேற்கொண்டு நேற்று 2 ஆம் திகதி அதனை அடைந்தது.

‘’வந்தே பாரத்’’ திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை திருப்பி அழைத்து வரும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் கப்பல் சேவையான “சமுத்திர சேது” நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் பயணிகளுடன் உரையாடியிருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக வாழ்த்துக்களை தெரிவித்திருந்த அதேவேளை, இலங்கையில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்பும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் ஆதரவுக்காக நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எஸ் ஜலஸ்வா இரண்டாவது தடவையாக இலங்கைக்கு பயணித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னர் 2017 மே மாதம் 30 ஆம் திகதி இக்கப்பல் வெள்ள நிவாரண பணிகளில் இலங்கை கடற்படையினருக்கு உதவியினை வழங்குவதற்காக மீட்புக்குழுவினருடனும் நிவாரண பொருட்களுடனும் இலங்கைக்கு பயணித்திருந்தது.

2017 இலங்கையில் வெள்ளப் பெருக்கும் மண்சரிவும் ஏற்பட்டு அது தொடர்பான முதல் செய்திகள் வெளியாகியிருந்த ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் ஷர்தூல், மற்றும் ஐஎன்எஸ் ஜலஷ்வா ஆகிய 3 கடற்படை கப்பல்களை இந்தியா நிவாரண நடவடிக்கைகளில் உதவுவதற்காக அனுப்பியிருந்தது.
இதற்கு மேலதிகமாக இந்து சமுத்திரத்திலும் அதற்கு அப்பாலும் கடற் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் மிக முக்கியமான வகிபாகத்தை வழங்கிவருவதற்கு மேலாக நெருக்கடியான காலப்பகுதியில் நட்பு நாடுகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் நாடாகவும் இந்தியா உள்ளது.

2004 கடற்கோள் அனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதி முதல் இந்திய கடற்படை கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் பல்வேறு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண பணிகளை முன்னெடுத்துள்ளன.

அண்மைய வருடங்களில் குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் இதாய் சூறாவளி மொசாம்பிக்கை தாக்கியமை, 2014 இல் இந்தோனேசியாவை மிக மோசமான நிலநடுக்கம் மற்றும் கடற்கோள் தாக்கியமை, 2018 இல் மொரீசியசை பேர்குற்றா சூறாவளி தாக்கியமை உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் இந்திய கடற்படை கப்பல்கள் பல்வேறு நாடுகளுக்கு நிவாரணப் பொருட்களையும் உதவிகளையும் வழங்கியுள்ளன.

இதேவேளை 2017 ஆம் ஆண்டு மோரா சூறாவளி தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இந்திய கடற்படையினர் பங்களாதேஷ் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டிருந்தனர். அத்துடன் மாலைதீவின் மாலேயில் நீர் சுத்திகரிப்பு நிலையம் தீவிபத்தில் சிக்கியதை அடுத்து அங்கு குடிநீருக்கான வசதிகளையும் இந்திய கடற்படை வழங்கியிருந்தது.

கடற்கொள்ளை எதிர்ப்பு, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான செயற்பாடுகள், பயங்கரவாத செயற்பாடுகளை முறியடித்தல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் வினைத்திறன் மிக்க பங்களிப்பை வழங்கிவரும் இந்தியா, கடல் மார்க்கத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.

No comments:

Post a Comment