(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான போலி பிரச்சாரங்களை எதிர்த்தரப்பினர் முன்னெடுக்கின்றார்கள். ஜனாதிபதி தேர்தலை போன்று பொதுத் தேர்தலிலும் பெரும்பாலான மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கும் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக காணப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்த்தரப்பினர் 2014ம் ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிட்ட போலி குற்றச்சாட்டுக்களை தற்போது மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள். ஜனாதிபதி பதிவியேற்ற காலத்தில் இருந்து முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து மக்கள் அரசியல் காரணிகளை விடுத்து கவனம் செலுத்த வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்ததால் மக்கள் எவ்வித நன்மைகளையும் பெறவில்லை மாறாக பாரிய விளைவுகளையே எதிர்கொண்டார்கள். ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான மக்கள் எடுத்த அரசியல் தீர்மானத்தை போன்று பொதுத் தேர்தலிலும் எடுத்து பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment