தற்போது 143 நாடுகளிலுள்ள 3,078 மாணவர்கள் உட்பட 38,983 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டமைச்சின் 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினூடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தரவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 4,040 குறுகிய கால வீசாவையுடையவர்களும், 27,854 புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், 3,527 தங்கிவாழ்வோர் மற்றும் 484 இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள் மற்றும் ஏனைய நபர்கள் உள்ளடங்குவர்.
அதேவேளை, ஏப்ரல் 21 தொடக்கம் தற்போது வரை, பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட அரச அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களென 15 நாடுகளிலிருந்து 3,600 வெளிநாட்டிலுள்ள இலங்கையர் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்படக்கூடிய வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, உள்வரும் வர்த்தக விமானங்களுக்காக விமான நிலையம் மூடப்பட்ட ஒரு வார காலப்பகுதிக்குள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரமைப்பின் உதவியுடன் 2020 மார்ச் 26 ஆம் திகதி 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பை வெளிநாட்டமைச்சு உருவாக்கியது.
இந்த இணைய முகப்புக்கு இணையாக, நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்புவோர் பற்றிய தரவுகளை சேகரிக்குமாறு இலங்கைத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களை அடையாளம் காண்பதற்கும், முன்னுரிமை அளிப்பதற்கும், திருப்பி அனுப்புவதற்குமான அடிப்படையாக இந்த இரண்டு மூலங்களும் செயற்படுகின்றன.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக உண்மையான உதவி மையமாக இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல் இணைய முகப்பு செயற்படுகின்றது.
இந்த இணைய முகப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 78,033 இலங்கையர்கள் இதில் பதிவு செய்துள்ளதுடன், முக்கியமாக நாட்டிற்கு மீள அழைத்து வரல் மற்றும் கொன்சுலர் பிரச்சினைகள் தொடர்பான உதவி சம்பந்தமாகவும், ஏனைய செயற்பாட்டு மற்றும் கொள்கை விடயங்கள் சம்பந்தமாகவும் உலகம் முழுவதிலுமுள்ள வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் 7,788 கேள்விகளுக்கு 24/7 என்ற அடிப்படையில் திறம்பட செயற்படும் பிரத்தியேகமான குழுவொன்று பதிலளித்துள்ளதென பொருளாதார விவகாரங்கள் (பலதரப்பு) மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் ஜான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment