கடலில் நிலைமை மாறுபட்டுள்ளதால் மீனவர்கள் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

கடலில் நிலைமை மாறுபட்டுள்ளதால் மீனவர்கள் பாதிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பில் கால நிலையில் மாற்றம் காணப்பட்டதுடன், வானம் இருள் சூழ்ந்து மப்பும் மந்தாரமாக காணப்பட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் பாசிக்குடா கடல் அலையானது வழமைக்கு மாறாக வேகம் குறைந்து காணப்பட்டதுடன், கடல் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து காணப்பட்டதாகவும் பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

இன்றைய நாளில் வானிலையில் சூரிய வெளிச்சம் குறைந்து கிழக்கு பிரதேசம் காணப்பட்டதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களின் விலையில் அதிகரிப்பு காணப்பட்டதுடன் கடல் உணவிற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மீனவர்களின் குடும்பம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் கொரோணா வைரஸ் பிரச்சனை சற்று குறைந்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை சுமாராக இயங்கி வரும் நிலையில் தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளமை மக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் பாரிய அச்சத்தினையும், சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளதை காண முடிகின்றது.
பல வருடங்களாக கடல் தொழில் செய்து வரும் காலங்களில் இவ்வாறானதொரு காலநிலையினை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. இக்கால வேளையில் கடும் வெப்ப காலமாக காணப்படும். ஆனால் தற்போது ஒரு மப்பும் மந்தாரமாக காணப்படுவது பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.

அத்தோடு பாசிக்குடா பகுதிக்கு இக்கால வேளையில் இலங்கையில் வாழும் மக்கள் வருவது வழக்கம், ஏனெனில் இக்காலத்தில் அதிகமான வெப்பம் தோற்றுவிக்கும் காலம் ஆனால் நாட்டில் கொரோணா அச்சம் காரணமாக மக்களின் வருகை இல்லை. ஆனாலும் காலநிலை மாற்றம் காரணமாக கடற்கரை பகுதிக்கு வருகை தருவதில் மீனவர்கள் பயந்த நிலையில் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் இருந்து ஆழ்கடல் செல்லும் படகுகள் மற்றும் கரையோரப் படகுகள் போன்றன அரசினால் விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கையை அடுத்து கடலுக்கு செல்வதனை தவிர்த்துள்ளதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடும் எனவும், இது தற்போது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment