பெருநாள் தினத்தின் சிறப்பு, தனித்துவத்தை வெளிப்படுத்த பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் "தக்பீர்" சொல்வதற்கான ஏற்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மேற்கொள்ள வேண்டுமெனவும், இதற்கான அனுமதியை முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் வழங்க வேண்டுமெனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸின் பரவலால் இரண்டு மாதங்களுக்கு மேலாக பள்ளிவாசல்கள் மூடப்பட்டு, எமது நல்லமல்கள், வணக்க வழிபாடுகள் வீடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் சமூக, சமய உணர்வுகள், ஒற்றுமைகளிலிருந்து தூரமானதான மன நிலைக்குள் முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை மாதங்களுக்கு எமது நல்லமல்கள் வீடுகளுக்குள் முடங்கும் என்பதைக் கூற முடியாதுள்ளது.
எனவே, மீண்டும் இந்த உணர்வுகள், ஒற்றுமைகளில் ஒன்றிணைய பெருநாள் தினத்தில் மட்டுமாவது பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் "தக்பீர்" சொல்லப்பட வேண்டும். துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற வேண்டும். இதன்மூலம் இந்த "தக்பீர்" சத்தத்தை செவிமடுத்தவாறு, வீடுகளில் தொழவும் வழி ஏற்படும்.
மேலும், பள்ளிவாசல் நிர்வாகிகள், முஅத்தின்கள், கதீப்மார்கள் இடைவெளி பேணி, பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையில் ஈடுபடவும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் அனுமதி பெறல் அவசியம்.
வெளிநாடுகளில் பெருநாள் தொழுகைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட இடமளிக்கப்பட்டுள்ளதை முன்னுதாரணமாகக் கொண்டே, இக்கோரிக்கையை விடுப்பதாகவும் முன்னாள் ஆளுநர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment