பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஆளுநர் நிச்சயம் வேண்டுமென அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், காரைதீவுப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (1) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில், கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு கடந்த மாதம் வேதனங்களைக் கொடுக்கவில்லை. இது குறித்து அந்த ஊழியர்களிடம் எழுத்துமூல அறிக்கையைக் கேட்டிருந்தோம்.
அவர்கள் எழுத்துமூல அறிக்கையை எங்களுக்குத்தரவில்லை. அறிக்கைகள் கிடைத்திருந்தால், உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தி, அவர்களது சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்திருப்போம்.
அந்த அறிக்கையூடாக ஆளுநருக்கும் உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கும் தெரியப்படுத்தி உடனே அவருக்கெதிராக நடவடிக்கையெடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நஷ்டயீட்டைப் பெற்றுக்கொடுத்திருப்போம், கடந்த 30 வருடங்களாக எமது தொழிற்சங்கத்தினூடாக தொழிலாளர்களுக்காகப் போராடி வருகின்றோம்.
கிழக்கு மாகாணத்திற்கு சரியான ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய, ஊழியர்களையும் கவரக்கூடிய ஒரு ஆளுநர் அமையப்பெறவில்லை. தற்பொழுது ஆளுநராக கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் மக்களுக்கு என்ன நடக்கின்றதென்று கூட அறியாத நிலையிலிருக்கின்றார்.
மாவட்டம் தோறும் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கண்டறியவில்லை. அவ்வாறான ஒருவர் எதற்காக ஆளுநர் பதவியிலிருக்க வேண்டும். எமது மாகாணம் குறித்து அக்கறையற்ற ஒருவரை இப்பதவியில் அமர்த்துவது சரியானதல்ல. அவரை பதவியிலிருந்து நீக்கி விட்டு, எமது பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் மும்மொழி பேசக்கூடிய ஒரு ஆளுநர் நிச்சயம் வேண்டும். நிர்வாகத்தைச் சரியாக நடத்தும் ஆளுநர் இருந்தால்தான் அடிமட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். நாங்கள் எமது அமைப்பு ரீதியாக அனுப்பும் கடிதங்களுக்குக்கூட பதில் கிடைப்பதில்லை எனக்கூறினார்.
No comments:
Post a Comment