பாறுக் ஷிஹான்
வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் எனப் போற்றியவர்கள்தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்களென கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தெரிவித்தார்.
கல்முனை சுபத்திராம விகாரையில் தொழிலாளர் தினம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (1) கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில், கடந்த வருடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமென பாரிய உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தோம். இது குறித்து இன்னும் சரியான பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்காமையை மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்வதுடன், கொரோனா அனர்த்த காலத்தில் அக்கறையுடன் செயற்படும் அரசாங்கம், வடக்கு பிரதேச செயலக விடயத்திலும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த வாரத்தில் இராணுவ வீரர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு வந்த கட்டத்தில் சிலர் கேவலமாக நன்றி மறந்து பேசி வருவது மனசுக்கு வேதனையாக இருக்கின்றது. அதேபோன்று, இராணுவ வீரர்கள் மட்டுமல்லாது, வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் தமது உயிரைப்பார்க்காமல் எமது நாட்டில் வாழும் இளம் சந்ததியினர் பாதுகாக்கப்பட வேண்டுமெனப் போராடும் போது, இழிவான வார்த்தைகளைப்பேச வேண்டாம்.
கடந்த மாதங்களில் வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் எனப்போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிப்பது, நன்றியுள்ள ஒருவர் கூறும் கருத்தல்ல. நோய்த்தொற்று வேண்டுமென்று ஒருவர் பரப்பியதல்ல. உலகளாவிய ரீதியில் ஆட்கொண்டுள்ள வைரஸ் தாக்கத்தையும், எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த நோயைககட்டுப்படுத்துவதற்கு முப்படைகள், வைத்தியர்கள் அயராது பாடுபடுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்புத்தருவதன் மூலம் மாத்திரம் தான் இந்த ஊரடங்குச்சட்டத்தை நீக்கி, சுமூகமான சூழ்நிலைக்கு நாம் மீண்டு வர முடியும். அரசாங்கம் ஊரடங்குச்சட்டத்தைத் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட வேண்டும். மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்தியாவசிய சேவையை அரசாங்கம் வீடு வீடாகச்சென்று நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment