(ஆர்.யசி)
கொவிட்-19 நெருக்கடியில் வெளிநாடுகளில் இருந்து இதுவரையில் 6500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் 41 ஆயிரம் இலங்கையர்களை நாட்டிற்கு வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் குறித்த ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், குறுகிய கால வீசா பெற்ற 11 ஆயிரம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளனர். அவர்களது வீசா காலம் முடிவடைந்துள்ளது. ஆகவே அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும் கல்விகற்கும் இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இப்போது வரையில் 6500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
மேலும் 41 ஆயிரம் இலங்கையர்கள் தாமும் இலங்கைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அவர்களை வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதற்கான அமைச்சரவை அனுமதியை வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன அமைச்சரவையில் பெற்றுக் கொண்டார்.
இலங்கைக்கு அனைவரையும் அழைப்பதில் எந்த சிக்கலும் இல்லை, ஆனால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் நாட்களில் இந்தோனேசியா, பங்களாதேஷ், ரஷ்யா, மாலைதீவுகள், பெலாரஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ள அனைவரையும் கட்டம் கட்டமாக வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால வீசா பெற்ற 11 ஆயிரம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளனர். அவர்களது வீசா காலம் முடிவடைந்துள்ளது. ஆகவே அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசேட விமானங்களை வழங்கவில்லை, எனினும் உரிய நாடுகளின் தூதரகங்களின் மூலமாக இவற்றை கையாண்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment