எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 01.04.2020 ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் ஏறாவூரில் நடாத்தப்பட்ட விசேட சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனிதபாவனைக்கு உதவாத பெருந்தொகையான உணவுப் பொருட்களை சுகாதாரத்திணைக்கள அதிகரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எம்.எச்.எம். தாரிக் மற்றும் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல். நௌபர் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்ற இப்பரிசோதனை நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
இச்சந்தையில் பழுதடைந்த மரக்கறி வகைகள், பழங்கள் மற்றும் கிழங்கு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த வியாபாரி எச்சரிக்கப்பட்டார். அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மிருகங்களுக்கு உணவாக வழங்கப்பட்டன.
இதேவேளை தவிட்டரிசி என்ற போர்வையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற சாயம் கலக்கப்பட்ட ஒரு தொகை அரிசி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அரிசியை சுகாதார அதிகாரிகள் தண்ணீரில் கழுவிப் பார்த்தபோது சாயம் கழன்று வெண்மையான அரிசியாக மாறியதை அவதானிக்க முடிந்தது.
தவிட்டரிசி குறிப்பாக நோயாளிகளுக்கென சிபாரிசு செய்யப்படுகின்ற நிலையில் அதில் சிகப்பு நிற சீமெந்து அல்லது சாயம் கலந்து விற்பனை செய்யப்படுவது மனிதாபிமானமற்ற செயலாகுமென கருத்து தெரிவிக்கப்பட்டது.
கொரோனா அச்சம் காரணமாக ஏறாவூர் பிரதேசத்தில் ஐந்து இடங்களில் நடாத்தப்பட்ட பொதுச்சந்தைகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment