அரசாங்கத்தின் உத்தரவின்படி சிகையலங்கார நிலையங்களை கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி தொடக்கம் மூடி வைத்துள்ளோம். இதனால் வருமானமின்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளோம். இந்த நிலையில் எந்தவித நிவாரணங்களும் எமக்கு கிடைக்கவில்லை எனவே ஊரடங்கு தளர்த்தப்படும் போது சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு தொகுதி சிகையலங்கார சங்கத்தின் தலைவர் தம்பையா இராசலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தில் இன்று (30) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு விட்ட நிலையில் நாங்களும் எமது சிகையலங்கார நிலையங்களை மூடி வைத்திருக்கிறோம். அதன் காரணமாக எமது அன்றாட வருமானம் தடைபட்டு விட்ட நிலையில் நாங்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளோம்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாட்களில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நாங்கள் சிகையலங்கார நிலையங்களை திறந்து எமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆயினும் தற்போது அரசாங்கம் மறு அறிவித்தல் வரை சிகையலங்கார நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்திய பின் நாங்கள் கடைகளை மூடிவிட்டோம் அன்றில் இருந்து இன்று வரை எமக்கான வருமானம் எதுவும் இல்லை. எமக்கு எந்த விதமான நிவாரணங்களும் கிடைக்கவில்லை
இந்த நிலையில் எமது தொழில் நிலையங்களை மூடி வைத்துள்ள நிலையில் வேறு சில சிகையலங்காரம் செய்யும் நபர்கள் தனிப்பட்ட முறையில் கிராமங்களுக்குள் சென்று சுகாதாரமற்ற முறையில் சிகையலங்கார தொழிலை மேற்கொள்கிறார்கள். இதனால் இதுவும் ஒரு பிரச்சினையாக உள்ளது.
இருந்தபோதும் நாங்கள் சுகாதார முறைகளை பின்பற்றி எமது சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நிருபர் சரவணன்
No comments:
Post a Comment